search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவில் சேர மாட்டேன் - மோகன்லால்
    X

    பா.ஜனதாவில் சேர மாட்டேன் - மோகன்லால்

    தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார். #Mohanlal #BJP
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    அங்கு பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஓ.ராஜகோபால் என்ற ஒரேஒரு எம்.எல்.ஏ. மட்டுமே உள்ளார். இதனால் அந்த கட்சி கேரள அரசியலில் தன்னை பலப்படுத்திக் கொள்ள பல்வேறு திட்டங் களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

    சமீபத்தில் சபரிமலை கோவிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்யும் விவகாரத்தில் பா.ஜனதா பெரிய அளவில் போராட்டம் நடத்தி ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியை கொடுத்தது. மேலும் சபரிமலை விவகாரததின் மூலம் தனது கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், அதை பாராளுமன்ற தேர்தலில் ஓட்டாக மாற்றவும் வியூகம் வகுத்து செயல்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பிரபலங்களை களம் இறக்கினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று பா.ஜனதா கணக்கு போட்டு உள்ளது. கேரளாவை பொருத்தவரை ஏற்கனவே நடிகர் சுரேஷ்கோபி பா.ஜனதாவின் மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இந்த நிலையில் மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் மோகன்லாலை தங்கள் வலையில் வீழ்த்த பா.ஜனதா காய்களை நகர்த்தியது. ஏற்கனவே மத்திய அரசின் பல திட்டங்களையும், செயல்பாடுகளையும் மோகன்லால் வரவேற்று இருந்ததால் அவரை பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் எப்படியும் களம் இறக்க வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது. இதற்கு ஏற்ப கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் மோகன்லால் போட்டியிடலாம் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறிவந்தனர். இதனால் திருவனந்தபுரம் எம்.பி. தொகுதியில் மோகன்லால் போட்டியிட உள்ளதாக சமீபகாலமாக பரபரப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில் தான் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக வந்த செய்திகளை நடிகர் மோகன்லால் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக மோகன்லால் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக நிறைய கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. ஆனால் நான் தொடர்ந்து ஒரு நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். என் தொழிலில் எனக்கு முழு சுதந்திரம் உள்ளது.

    அரசியல் என்பது எனக்கு டீ குடிக்கிற மாதிரிதான். அரசியல் பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது என்பதால் எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எனக்கு அரசியல் ஒத்துவராது. அதனால் தேர்தலில் நிற்க எனக்கு விருப்பம் இல்லை. அதேபோல பா.ஜனதா கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை.

    அரசியல் கட்சிகள் தங்களுக்கு விருப்பமான நபர்களை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான். அதற்காக அவர்களை குறைகூற முடியாது. அதேசமயம் அது பற்றிய முடிவை அந்த நபர்தான் எடுக்க வேண்டும். அதன்படி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை.

    எனக்கு கலைதான் 99 சதவீத வாழ்க்கை. நான் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய உள்ளது. அதில் எனது கவனத்தை செலுத்தி வருகிறேன். எனவே அதில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட முடியாது. தொடர்ந்து நடிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் மோகன்லாலுக்கு பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்‌ஷன் நெருங்கிய நண்பர் ஆவார். இதே போல பல திரையுலக நண்பர்களும் அவருக்கு உள்ளனர். தனது நண்பர்கள் வட்டாரத்திலும் தனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை என்றே மோகன்லால் கூறி உள்ளார். #Mohanlal #BJP
    Next Story
    ×