search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசு மனு தாக்கல்
    X

    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசு மனு தாக்கல்

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. #Mullaperiyardam #SC
    புதுடெல்லி:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தமிழகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடை இல்லை என கூறிய நீதிபதிகள், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 9-ந்தேதி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மூல வழக்கில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்தம் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கேரளா அரசு அங்கு கட்டுமான பணிகளை தொடங்கி இருப்பதாகவும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த நவம்பர் 26-ந்தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று புதிதாக கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், முல்லை பெரியாறு அணை பகுதியில் ஏற்கனவே உள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், நீர்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அங்கு தரையை சமப்படுத்த கொட்டப்பட்ட மண்ணை அகற்ற உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Mullaperiyardam #SC

    Next Story
    ×