search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 3 தங்க கிரீடங்கள் மாயம் - ஊழியர்களிடம் விசாரணை
    X

    திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 3 தங்க கிரீடங்கள் மாயம் - ஊழியர்களிடம் விசாரணை

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜசாமி கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இதுதொடர்பாக கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #TirupatiTemple
    நகரி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி ரெயில்நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜபெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் இந்த கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்வது வழக்கம்.

    தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்வார்கள். இக்கோவிலில் சாமிக்கு அணிவிப்பதற்காக வைர, வைடூரிய கற்கள் பதிக்கப்பட்ட 3 தங்ககிரீடங்கள் இருந்தன. இவை கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டு இருக்கும். தினமும் உற்சவமூர்த்திகளான கோவிந்தராஜசாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய சாமிகளுக்கு இந்த தங்க கிரீடங்கள் பிரம்மோற்சவம் மற்றும் திருவிழா காலங்களில் அணிவிக்கப்படுவது வழக்கம்.

    சாமி வீதியுலா முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படும். பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு லாக்கரை திறந்து நகைகள் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்ப்பது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் நகைகளை சரிபார்த்தனர். அப்போது சாமிக்கு அணிவிக்கும் 3 தங்க கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால் மற்ற நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாயமான கிரீடங்கள் மொத்தம் ஒரு கிலோ 348 கிராம் எடையுள்ளவை.

    கிருஷ்ணதேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி, போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் கோவிலுக்கு சென்று நகை பாதுகாப்பு அறை மற்றும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம் பிற்பகல் நடந்த கல்யாண உற்சவத்தின்போது தங்கக்கிரீடங்கள் இருந்துள்ளன.

    கல்யாண உற்சவம் நடந்த மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதாகி உள்ளது. எனவே அதில் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுதவிர 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தங்ககிரீடங்கள் மாயமானது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் கூறுகையில், ‘அறையில் மற்ற நகைகள் பாதுகாப்பாக இருப்பதால் வெளி ஆட்கள் கிரீடங்களை எடுத்துச் செல்ல வாய்ப்பு இல்லை. சந்தேகத்துக்கு உள்ளான கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே தங்க கிரீடங்கள் மாயமான தகவல் பரவியதால், கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #TirupatiTemple

    Next Story
    ×