search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பிரச்சினையில் அரசியல் நோக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பிரச்சினையில் அரசியல் நோக்கம் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்

    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பிரச்சினையில் அரசியல் நோக்கம் உள்ளதாக, ஆலை நிர்வாகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வக்கீல் வாதிட்டார். #Sterlite
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பில் கடந்த இரு நாட்களாக மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் தங்கள் விரிவான வாதங்களை முன்வைத்தனர்.

    இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் நேற்று தன்னுடைய வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதாடுகையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுசூழல் பாதிப்பை சரி செய்ய பசுமை சோலைகளை உருவாக்க வேண்டும் என ஏற்கனவே ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், ஆனால் ஆலை நிர்வாகம் கடந்த 12 ஆண்டுகளாக அவற்றை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

    உடனே நீதிபதிகள், ஆலையை சுற்றியுள்ள பகுதியில் சுகாதார நிலையை கண்காணிக்க கடந்த 2013-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட குழு செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு குரு கிருஷ்ணகுமார், அது தொடர்பான தகவல் தங்களிடம் தற்போது இல்லை என்று பதில் அளித்தார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால்தான் ஆலையின் அனுமதி குறித்து கேள்வி எழுந்தது என்றும், அதன்பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறி அவர் தன்னுடைய வாதத்தை நிறைவு செய்தார்.



    அதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் தன்னுடைய வாதத்தை தொடங்கினார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    ஆலை 6 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இந்த 6 மாத காலத்தில் மாசு ரீதியாக எந்த ஒரு மாற்றமும் வரவில்லை. எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை. இந்த ஆலையை மூடும் பிரச்சினையில் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் உள்ளதே தவிர வேறு எதுவும் இல்லை. ஆலை மாசு ஏற்படுத்தவில்லை என நாங்கள் தாக்கல் செய்த அறிவியல் பூர்வமான அறிக்கைகளை தமிழக அரசு எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது. எந்த ஒரு காலத்திலும் ஆலையை ஆய்வு செய்ய ஒத்துழைக்காமல் நிர்வாகம் இருந்ததில்லை.

    விதிகள் மீறப்பட்டுள்ளது என தெரிவித்து, ஆலையை ஆய்வு செய்ய குழு ஏற்படுத்தப்பட்டது. அந்த குழு ஆலையை ஆய்வு செய்து எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என கூறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசுபடலாம் என கூறி ஆலை மூடப்படுகிறது. அப்படி மூட வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட வேண்டிவரும். அதை செய்ய முடியுமா?

    தாமிர கழிவுகளை திறந்த வெளியிலும், தனியார் நிலத்திலும் கொட்டினோம் என்பது எங்கள் மீது கூறப்படும் பிரதான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் அவற்றை நாங்கள் கொட்டவில்லை, தாமிர கழிவுகளை பலர் தங்கள் நிலங்களில் கொட்டி நிரப்பி சமன் படுத்தவே வாங்கிச் சென்றனர். ஜிப்சம் கழிவுகளை முழுமையாக சுத்திகரித்தே வெளியேற்றுகிறோம். எனவே சுற்றுச்சூழல் மாசு ஏற்பட வாய்ப்பே இல்லை.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு முகாந்திரம் உண்டு. எனவே எங்கள் கோரிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது சரிதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பிலான வாதம் வருகிற 5-ந்தேதியும் தொடரும் என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை அந்த தேதிக்கு ஒத்திவைத்தனர். #Sterlite
    Next Story
    ×