search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு- போலீஸ் ஆய்வறிக்கையில் தகவல்
    X

    கேரளாவில் ஒரு நாளைக்கு 5 பெண்கள் கற்பழிப்பு- போலீஸ் ஆய்வறிக்கையில் தகவல்

    கேரளாவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக போலீஸ் இணைய தளத்தில் வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருவதாக பெண் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் கேரள போலீஸ் இணையதளத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் வெளியானது.

    இதில் கடந்த ஆண்டு மட்டும் கேரளாவில் 2015 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கடந்த 2007-ம் ஆண்டில் 500 கற்பழிப்பு வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

    கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை வழக்குகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை போலீஸ் இணைய தளம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இந்த ஆய்வு மூலம் நாள் ஒன்றுக்கு கேரளாவில் சராசரியாக 5 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 721 வழக்குகள் பதிவாகி உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 216-ம், மலப்புரம் மாவட்டத்தில் 187 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

    தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 2059 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த ஆண்டு இது 2043 வழக்குகளாக குறைந்துள்ளது.

    இதுபற்றி பெண் ஆர்வலர்கள் கூறும்போது, முன்பு பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியில் தெரிவிக்க தயக்கம் காட்டி வந்தனர். தற்போது இந்த நிலைமை மாறி உள்ளது. அவர்களுக்கு வன்கொடுமை நடந்தால் உடனே அதுபற்றி புகார் செய்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது என்றனர்.

    பெண்களுக்கு எதிரான வழக்குகளை உடனடியாக பதிவு செய்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனையை விரைவாக பெற்றுக் கொடுத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையுமென்றும் பெண் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×