search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? - மத்திய மந்திரி கருத்து
    X

    இந்தியாவில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியுமா? - மத்திய மந்திரி கருத்து

    இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என சமீபத்தில் லண்டனில் நிரூபிக்கப்பட்டதாக வெளியாகும் தகவலுக்கு மத்திய மந்திரி பதிலளித்துள்ளார். #MANaqvi #EVMtampering
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் உவாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    பின்னர், உத்தரபிரதேசம், குஜராத், டெல்லி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த தில்லுமுல்லு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.

    ராணுவ தேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசையை பா.ஜ.க. பயன்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் ஊடுருவி இந்த தில்லுமுல்லுவை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா. 

    வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான நான்  இந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் என்மீது தாக்குதல் நடத்தி பா.ஜ.கவினர் கொல்ல முயன்றனர் என்னும் ஒரு ‘பகீர்’ தகவலை சையத் சுஜா வெளியிட்டுள்ளார்.

    இந்த தில்லுமுல்லு தொடர்பாக விரிவாக ஆராய்ந்து கட்டுரை எழுத முயன்றதால்தான் கர்நாடக மாநிலத்தில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தெரிந்து வைத்திருந்த மத்திய மந்திரி கோபிநாத் முன்டேவும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    ஒரு கட்சி வேட்பாளருக்கு விழும் வாக்குகளை வேறொருவருக்கு விழுந்ததுபோல் பதிவாகச் செய்வது எப்படி? என்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி சமீபத்தில் லண்டனில் இருந்து வீடியோ கான்பிரசிங் மூலம் செயல்முறை விளக்கத்தையும் சையத் சுஜா செய்து காட்டினார். 

    இந்த செயல்முறை விளக்கத்தின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் அருகில் இருந்ததால் இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பணியாற்றும் சையத் சுஜா அந்நாட்டு அரசிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் இன்று அளித்துள்ள விளக்கத்தில், ‘இந்த இயந்திரங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன.

    புளூடூத் அல்லது வைஃபை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குள் யாரும் ஊடுருவி தில்லுமுல்லு செய்ய முடியாது. வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்துதான் எதையும் செய்ய முடியும். அப்படி திறக்கப்பட்டால் எங்கள் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து விடுவார்கள’ என தெரிவித்துள்ளது.

    லண்டனில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தில் எதிர்தரப்பாக மாறி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் விரும்பவில்லை. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியானதும் டெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, ‘காங்கிரஸ் கட்சியிடம் பத்திரிகை துறைசார்ந்த பலர் சிக்கியுள்ளனர். ஆட்சியில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என்பதற்காக இந்த தன்னார்வலப் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானின் உதவியைக்கூட நாடுவார்கள். 

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கு தோல்வி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு என்ற பிரச்சனையை காங்கிரஸ் கட்சியினர் பூதாகரப்படுத்தி தேர்தல் ஆதாயம்பெற நினைக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாட்டில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என சில தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி  தெரிவித்தார்.

    இந்த குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஷ்ரா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #MANaqvi  #EVMtampering
    Next Story
    ×