search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    65 நாட்கள் பூஜைக்குப்பின் சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது
    X

    65 நாட்கள் பூஜைக்குப்பின் சபரிமலையில் நடை அடைக்கப்பட்டது

    சபரிமலையில் சுமார் 65 நாட்கள் பூஜைக்குப்பின் நேற்று நடை அடைக்கப்பட்டது. #Sabarimala #AnnualPilgrimage
    சபரிமலை:

    கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகளும், பா.ஜனதா போன்ற எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின.

    இந்த சூழலில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதம் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் சிலர் அய்யப்பனை தரிசிக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் வன்முறை அரங்கேறியது.

    இதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந்தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27-ந் தேதி வரை மண்டல பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டது.

    சபரிமலையின் முக்கியமான இந்த விழா காலத்திலும் அங்கு போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு குறைவில்லை. எனவே அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு இருந்தது. இந்த நாட்களிலும் தடை செய்யப்பட்ட வயதுடைய பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் இந்து அமைப்பினரின் எதிர்ப்பால் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது.

    எனினும் கடந்த 2-ந்தேதி அதிகாலையில் பிந்து (வயது 42) மற்றும் கனகதுர்கா (44) என்ற 2 பெண்கள் திடீரென சபரிமலையில் அய்யப்பனை தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதைப்போல இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் சபரிமலையில் தரிசனம் செய்தார். இந்த மண்டல பூஜை-மகரவிளக்கு காலகட்டத்தில் மட்டும் தடை செய்யப்பட்ட வயதுடைய 51 பெண்கள் அய்யப்பனை தரிசனம் செய்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு கூறியுள்ளது.

    இவ்வாறு மிகவும் பரபரப்பும், பதற்றமுமாக கடந்த சபரிமலையின் தற்போதைய விழா நாட்கள் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 65 நாட்கள் நடந்த இந்த விழாக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    நேற்று அதிகாலையில் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராகவ வர்மா ராஜா சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து பஸ்மாபிஷேகம் நடந்தது. பின்னர் ஹரிவராசனம் இசைக்க 6.15 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டது.

    அடுத்ததாக சபரிமலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மாசி மாத பூஜைக்காக அப்போது 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும்.

    சபரிமலையில் தற்போது நடை அடைக்கப்பட்ட போதும், மாநிலத்தில் கட்சிகளுக்கு இடையிலான மோதல் தீர்ந்தபாடில்லை. ஆளும் இடதுசாரிகளும், பா.ஜனதாவினரும் தொடர்ந்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சபரிமலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் அனைத்தும் தோல்வியடைந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.

    ஆனால் சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்க நடத்தப்பட்ட போராட்டம் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்து உள்ளார். முன்னதாக சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் 49 நாட்களாக பா.ஜனதாவினர் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று முடித்துக்கொள்ளப்பட்டது. 
    Next Story
    ×