search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி
    X

    சபரிமலை கோவிலில் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் - மாதா அமிர்தானந்த மயி

    சபரிமலை அயப்பன் கோவில் விவகாரத்தில் காலகாலமாக நடைமுறையில் உள்ள பாரம்பரியம் கடைபிடிக்கப்பட வேண்டும் என மாதா அமிர்தானந்த மயி வலியுறுத்தியுள்ளார். #Amritanandamayi #sabarimala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பையடுத்து, ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற பல பெண்களை சில அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றுவது எங்கள் அரசின் கடமை. தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்கமாக அறிவித்தார்.

    தரிசனத்துக்காக வரும் பெண்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக மாநில அரசின் ஆதரவுடன் கேரளாவின் பல மாவட்டங்களை உள்ளடக்கி தென்முனை எல்லைப்பகுதியில் இருந்து வடமுனை எல்லைப்பகுதி வரை சுமார் 620 கிலோமீட்டர் தூரத்துக்கு மனித மதில் சுவர் நிகழ்ச்சியும் ஜனவரி முதல் தேதியன்று நடைபெற்றது. இதில் சுமார் 35 லட்சம் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.

    இந்நிலையில், சபரிமலையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பாதுகாக்கும் வகையில் சபரிமலை கர்மா சமிதி என்னும் வலதுசாரி அமைப்பின் சார்பில் திருவனந்தபுரம் நகரில் உள்ள புத்தரிகன்டம் திடலில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆன்மிக தலைவர் மாதா அமிர்தானந்த மயி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சமுதாயத்தில் மாற்றங்கள் அவசியமானவை. ஆனால், அந்த மாற்றங்கள் பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும். கோவில்கள் நமது கலாச்சார அடையாளத்தின் தூண்கள் என்பதால் கோவில்களில் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும்.

    சபரிமலையில் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானவை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிப்பட்ட பாரம்பரியம் உள்ளதால் அந்த பாரம்பரியங்களை எல்லாம் மதித்து நடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்,

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டதாக சபரிமலை கர்மா சமிதி அமைப்பினர் தெரிவித்தனர். #Amritanandamayi #sabarimala
    Next Story
    ×