search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் பனிச்சரிவில் 10 பேர் புதைந்தனர் - மீட்பு பணிகள் தீவிரம்
    X

    காஷ்மீர் பனிச்சரிவில் 10 பேர் புதைந்தனர் - மீட்பு பணிகள் தீவிரம்

    காஷ்மீர் பனிச்சரிவுக்குள் 10 பேர் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    நேற்று காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக நேற்று வானிலை இலாகா கூறி இருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.

    பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பனிச்சரிவுகள் இருப்பதால் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.



    இதற்கிடையே மேலும் பல பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படலாம் என்று லே மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    லே மாவட்டத்தில் இன்று மைனஸ் 15.6 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவியது. கார்கில் பகுதியில் மைனஸ் 19.2 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலை காணப்பட்டது.

    அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.  #Kashmir #Avalanche
    Next Story
    ×