search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம்: தேவேகவுடா
    X

    கர்நாடகத்தில் பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம்: தேவேகவுடா

    கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda
    பெங்களூரு :

    பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சிறுபான்மையினா் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நான் 10 மாதங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருந்துள்ளேன். அதிர்ஷ்டத்தின் காரணமாக நான் பிரதமராக ஆனேன் என்றும், எனது பதவி காலத்தில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். நான் பிரதமராகும் முன்பாக ராணுவத்தில் முஸ்லிம்கள் சேர முடியாத நிலை இருந்தது. முஸ்லிம்கள் ராணுவத்தில் சேர விதிக்கப்பட்டு இருந்த தடையை நான் பிரதமாக ஆன பின்பு தான் நீக்கினேன்.

    தற்போது மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு காங்கிரஸ் தலைவர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் குமாரசாமி முதல்-மந்திரியாக ஆதரவு அளிப்பதாகவும், இது குமாரசாமியின் அரசும் என்றும் தலைவர்கள் கூறினார்கள்.

    அதன்படி, அவர் முதல்-மந்திரியாகி உள்ளார். அவர் முதல்-மந்திரியாக இருப்பது பா.ஜனதாவுக்கு பிடிக்கவில்லை. பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க எங்கள் கட்சிக்கு விருப்பம் இல்லை. அதனால் இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

    முதல்-மந்திரி குமாரசாமி, சிறுபான்மையினருக்கு எதுவும் செய்யவில்லை என்று தவறான தகவல்களை பரப்புகின்றனர். அது உண்மை அல்ல. இதனை யாரும் நம்ப வேண்டாம். அதுபற்றி கவலையும் பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே முழு காரணம் ஆகும்.

    இதனை ஆதாரத்துடன் எப்போது வேண்டுமானாலும் சொல்ல தயாராக உள்ளேன். அடுத்த பிரதமர் யார்? என்பதை நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்கள். பிரதமராக யார் வந்தாலும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

    இவ்வாறு தேவேகவுடா பேசினார்.  #DeveGowda
    Next Story
    ×