search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று நாள் பயணமாக குஜராத் வந்தார் மோடி- உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்
    X

    மூன்று நாள் பயணமாக குஜராத் வந்தார் மோடி- உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்

    மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இந்த சுற்றுப்பயணத்தின்போது உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக  மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.



    டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானத்தில் இன்று மதியம் அகமதாபாத்திற்கு வந்தார் மோடி. அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில், அவரை குஜராத் கவர்னர் ஓ.பி.கோலி, முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் துணை முதல் மந்திரி எம். நிதின் படேல், குஜராத் பாஜக தலைவர் ஜீத்து வகானி, அகமதாபாத் மேயர் பிஜல்பான் படேல் மற்றும் முதன்மை செயலாளர் ஜெ.என் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி காந்தி நகர் சென்று அங்கு நடைபெற உள்ள உலகளாவிய வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார். அதன்பின்னர் அகமதாபாத் திரும்பும் மோடி, விஎஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, சர்தார் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதன்பின்னர் நாளை (ஜனவரி 18) உலக முதலீட்டாளர் மாநாட்டை மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளின் ஜனாதிபதிகள், நான்கு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த பயணத் திட்டங்களை முடித்துக் கொண்டு 19-ம் தேதி அகமதாபாத் திரும்பும் மோடி, அங்கிருந்து சூரத் அருகே உள்ள ஹஜிரா சென்று துப்பாக்கித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர் அருகிலுள்ள  சில்வாஸா நகரத்திற்கு சென்று ஒரு மருத்துவக் கல்லூரியையும் திறக்க உள்ளார்.

    மோடியின் சுற்றுப்பயணத்தையொட்டி அகமதாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 9-வது உலக முதலீட்டாளர் மாநாடு நாளை தொடங்கி 20-ம் தேதி முடிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #VibrantGujarat #GlobalInvestorsSummit 
    Next Story
    ×