search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி- லல்லு மகன் அறிவிப்பு
    X

    பீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி- லல்லு மகன் அறிவிப்பு

    பீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்று லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். #TejashwiYadav #congress #mayawati #akhileshyadav

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் அதே வேளையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்து உள்ளன. அதில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை.

    இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், லல்லுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் உத்தரபிரதேசத்திற்கு சென்று அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு இந்த கட்சி காங்கிரசுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    இந்த நேரத்தில் தேஜஸ்வி யாதவ் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்ததால் அவரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற பேச்சு அடிபட்டது.

    இந்த நிலையில் பாட்னாவில் மகர சங்கராந்தியை யொட்டி நேற்று காங்கிரஸ் சார்பில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாயாவதியும், அகிலேஷ் யாதவும் என்னைவிட மூத்தவர்கள். மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து பேசினேன். கூட்டணி தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை.

    காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி என்பது மிக பழமையான கூட்டணி. இதை எனது தந்தை லல்லுபிரசாத்தும், சோனியா காந்தியும் பரஸ்பர நம்பிக்கையுடனும், புரிதலுடனும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது.

    காங்கிரசை பொறுத்த வரை தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் கட்சி. அதனுடன் நல்ல கூட்டணியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதில் மாற்றம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TejashwiYadav #congress #mayawati #akhileshyadav

    Next Story
    ×