search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் - குலாம் நபி ஆசாத்
    X

    உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் - குலாம் நபி ஆசாத்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என குலாம் நபி ஆசாத் இன்று அறிவித்துள்ளார். #Congresscontest #LokSabhaelections #GhulamNabiAzad
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்தன. இந்த இரு கட்சிகளும் காங்கிரசுடன் இணைந்து பலமாக கூட்டணி அமைத்து பாஜகவுடன் மோதும் என எதிர்பார்த்த நிலையில் இந்த அறிவிப்பு காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

    எனினும், தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்ட சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் எங்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.

    இந்த முடிவு காங்கிரஸ் பக்கம் இவ்விரு கட்சிகளும் பரிவு காட்டுவதைப்போல் தோன்றியது. அதற்கேற்ப, கடைசி நேரத்தில் இந்த கூட்டணிக்குள் காங்கிரசுக்கும் இடம் கிடைக்கலாம் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநில அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அவசர கூட்டம் இன்று லக்னோ நகரில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய முன்னாள் மந்திரி குலாம் நபி ஆசாத்,
    ‘பாஜகவை தோற்கடிப்பதற்காக அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்க தயார் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். ஆனால், சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களுக்குள் மட்டும் ஒரு கூட்டணியை அமைத்துகொண்டு கதவை சாத்திக் கொண்டனர். அதனால், நாங்கள் யாரையும் வற்புறுத்த முடியாது.

    எனவே, வரும் தேர்தலில் தனியாகவே பாஜகவை வீழ்த்த நாங்கள் தயாராகி விட்டோம். உ.பி.யில் உள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும். எங்களுடன் இணைந்து பாஜகவை வீழ்த்த நினைக்கும் மதச்சார்பற்ற கட்சிகளை வரவேற்போம்’ என குறிப்பிட்டார்.

    கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றதுபோல் காங்கிரஸ் வரும் தேர்தலிலும் முதலிடத்தை பிடிக்கும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு கூடுதலான இடங்களை நாங்கள் பிடிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  #Congresscontest #80seatsofUP #LokSabhaelections #GhulamNabiAzad
    Next Story
    ×