search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாராளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காததால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இன்று ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். அதற்கு  பின்னர் அவை கூடியபோது அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் ஒரு தெலுங்கு தேசம் உறுப்பினரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து  அமளி நீடித்ததால் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த அமளிகளுக்கு இடையில், விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோயை நீக்கும் தனிநபர் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது.

    இதன் பின்னரும் அவையில் கூச்சல் நீடித்ததால் மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.  #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    Next Story
    ×