search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 நாட்களாக சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் - அழுகிய வாடை வீசுவதால் உயிருடன் இருப்பது பற்றி சந்தேகம்
    X

    15 நாட்களாக சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் - அழுகிய வாடை வீசுவதால் உயிருடன் இருப்பது பற்றி சந்தேகம்

    மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் 350 அடி ஆழத்தில் வேலை செய்தபோது ஆற்று நீர் உள்ளே புகுந்ததால், 15 தொழிலாளர்கள் 15 நாட்களாக சிக்கி தவிக்கிறார்கள். #Meghalayacoalmine
    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், கிழக்கு ஜைன்டியா மாவட்டம் லும்தாரி கிராமத்தில் ஒரு நிலக்கரி சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கம், அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. சுரங்கத்தின் அருகில் லிட்டின் என்ற ஆறு ஓடுகிறது.

    சுரங்கத்தில் விபத்து ஏற்படும்போது, உள்ளூர் தொழிலாளர்களாக இருந்தால், உள்ளூர் மக்கள் பிரச்சினை செய்வார்கள் என்று கருதி, இந்த சுரங்க நிர்வாகம் வேறு மாநில தொழிலாளர்களையே பணி அமர்த்துவது வழக்கம். தற்போது, அசாம் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிகிறது.

    தொழிலாளர்கள் சுமார் 350 அடி ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். அடிப்பகுதிக்கு செல்லும் வழியில் கிளைகள் போன்று இருபுறமும் பிரிந்து செல்லும்வகையில் கிடைமட்டமாகவும் சுரங்கம் தோண்டி உள்ளனர். இப்பகுதி ‘எலி பொந்து’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த 13-ந் தேதி, இந்த நிலக்கரி சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகில் உள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்தது.

    இதனால், சுமார் 15 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டனர். அவர்கள் எலி பொந்து பகுதியில் இருப்பதாக தெரிகிறது. அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும், போலீசாரும் களத்தில் இறங்கினர்.

    சுரங்கத்துக்குள் வெள்ள நீர்மட்டம் 70 அடியாக உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 அடி வரை மட்டுமே நீருக்குள் இறங்க முடியும். எனவே, அந்த அளவுக்கு நீரை வெளியேற்ற முயன்றபோது, குறைந்த சக்தி கொண்ட மோட்டார்களால் தண்ணீரை வேகமாக வெளியேற்ற முடியவில்லை. அத்துடன், மழையும் பெய்ததால் கடந்த திங்கட்கிழமை மீட்புப்பணி நிறுத்தப்பட்டது.

    அதிக சக்திவாய்ந்த மோட்டார்களை அனுப்பி வைக்குமாறு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த தகவல் 26-ந் தேதிதான் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார்கள், சாலைமார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இவை சம்பவ இடத்துக்கு வந்து சேர இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுடன் 15 நாட்கள் ஆனநிலையில், மீட்புப்பணி இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே, நேற்று முன்தினம் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 நீச்சல் வீரர்கள் சுரங்கத்துக்குள் சென்றனர். அங்கு அழுகிய வாடை வீசுவதாக அவர்களில் ஒருவர் தெரிவித்தார். எனவே, தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    ஆனால், வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் தேங்கி கிடப்பதால், துர்நாற்றம் வீசி இருக்கலாம் என்று மீட்புப்பணி மேற்பார்வையாளர் சந்தோஷ் சிங் என்பவர் கூறினார்.

    தொழிலாளர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அனுமதி பெறாத சுரங்கம் என்பதால், அதன் வரைபடமும் இல்லை. தொழிலாளர்களிடம் உயிர் காக்கும் சாதனங்கள் இருக்கிறதா? என்றும் தெரியவில்லை.#Meghalayacoalmine
    Next Story
    ×