search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி-உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம்
    X

    டெல்லி-உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம்

    டெல்லி மற்றும் உ.பி.யில் பிடிபட்ட பயங்கரவாதிகள் பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கவும் திட்டம் தீட்டியிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் பல இடங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த 10 பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு படையினர் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    அவர்களின் சதித்திட்டம் முன்கூட்டியே கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு இருப்பதால் நாடு பெரிய தாக்குதலில் இருந்து தப்பி உள்ளது.

    இந்த  பயங்கரவாதிகள் ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அதேபோன்று இந்தியாவிலும் செயல்பட திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்காக ஹர்கத்- உல்-ஹர்ப்-இ-இஸ்லாம் என்ற பெயரில் பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினார்கள். இதற்கு முப்தி முகமது சுகாய்ல் என்பவன் மூளையாக செயல்பட்டான்.

    இவன் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா என்ற இடத்தை சேர்ந்தவன். அங்கு ஹக்கிம் மக்தாப் உதின் சாலையில் மதரசா (மத பாடசாலை) உள்ளது.

    இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தான். அவனுக்கு 29 வயது ஆகிறது. ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அவன் இந்த புதிய இயக்கத்தை தொடங்கினான்.

    அதில், உத்தரபிரதேச பகுதியை சேர்ந்த பலரை உறுப்பினராக சேர்த்தான். இவனது பெற்றோர் டெல்லியில் உள்ள ஜப்ராபாத் என்ற இடத்தில் வசித்து வந்தனர்.

    இது, டெல்லியில் உள்ள குடிசை பகுதி ஆகும். அங்கும் தனது இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்காக சமீப காலமாக டெல்லியில் தங்கி இருந்தான்.

    அங்கு பல்வேறு இளைஞர்களை தன்பக்கம் இழுத்து இயக்கத்தை பெரிய அளவில் உருவாக்கினான். அதை தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் உருவாக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள போலீஸ் தலைமையகம், ஆர்.எஸ்.எஸ். தலைமையகம், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

    அதுமட்டும் அல்லாமல், பாரதிய ஜனதா தலைவர்கள், இந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரையும் கொல்வதும் அவர்கள் திட்டமாக இருந்தது.

    இதற்காக ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தாக்குதல் திட்டங்களையும் அவர் தயாரித்து கொடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில் தான் இந்த குழுவினர் செயல்பட்டனர். வெடி குண்டு தயாரிப்பதற்காக வெடி பொருட்களை சேகரித்தனர்.

    மேலும் தலைவர்களை கொல்வதற்கு ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்துவதும் அவர்கள் திட்டமாக இருந்தது.

    இதற்காக அவர்களாகவே சொந்தமாக ராக்கெட் லாஞ்சரை தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பம் மூலமாக தயாரித்தனர்.

    இந்த அமைப்பில் முப்தி முகமது சுகாயிலுக்கு அடுத்த முக்கிய நபராக அனஸ் யூனுஸ் (24) என்பவன் இருந்து வந்தான்.

    டெல்லி ஜப்ராபாத்தை சேர்ந்த இவன் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தான். தனக்கு தெரிந்த என்ஜினீயரிங் தொழில்நுட்பம் மூலம் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வெடிகுண்டு தயாரிக்க உதவினான்.

    இயக்கத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் எப்படி வெடி குண்டு தயாரிப்பது? அதை எவ்வாறு பொறுத்துவது? எந்த மாதிரி தாக்குவது போன்ற நுட்பங்களை முப்தி முகமது சுகாயிலும், அனஸ் யூனுசும் மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தனர்.

    முப்தி முகமது சுகாயிலிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மற்ற பயங்கரவாதிகளுக்கு தாக்குதல் பற்றி சொல்லி கொடுக்கும் வீடியோக்கள் இருந்தன.

    பயங்கரவாதிகளிடம் இருந்து 25 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில், பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைட், கந்தகம் ஆகியவை இருந்தன.

    மேலும் 112 அலாரம் கடிகாரம், 12 துப்பாக்கிகள், புல்லட் புரூப் சட்டை, 90 செல்போன்கள், 134 சிம்கார்டுகள், ரூ.7½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    இதற்கு தேவையான பணத்தை பலரிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவும் வகையில் பணத்தை தாராளமாக கொடுத்துள்ளனர்.

    மேலும் பயங்கரவாதிகளில் ஒருவனான சுபாயர் மாலிக் என்பவன் தனது வீட்டில் இருந்தே நகைகளை திருடி அதில் விற்ற பணத்தை பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுத்துள்ளான்.

    துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் தயாராக இருந்த நிலையில் அடுத்ததாக வெடி குண்டுகளை முழுமையாக தயாரிக்க ஆயத்தமாக இருந்தனர்.

    ‘டைம்பாம்’ வகை குண்டுகளை வைப்பதே அவர்களின் முக்கிய திட்டமாகும். இதற்காகத்தான் கடிகாரத்தை வாங்கி தயாராக வைத்து இருந்தனர்.

    அந்த வெடிகுண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதற்கும் சாதனங்களை உருவாக்கி இருந்தனர்.

    மேலும் சிலர் தற்கொலை படை பயங்கரவாதிகளாக மாறி தாக்குதல் நடத்துவதற்கும் தயாராக இருந்தனர். ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தை ஒட்டி முதல் கட்ட தாக்குதலை நடத்துவது அவர்களது திட்டமாகும்.

    தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை கண்டறிந்த அவர்கள் அந்த இடங்களுக்கு சென்று எந்த மாதிரி தாக்குதல் நடத்த வேண்டும் என்று முழுமையாக ஆய்வு செய்தனர்.

    அதே போல் தலைவர்கள் மீது நடத்த வேண்டிய தாக்குதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தயாராக இருந்தார்கள்.

    குடியரசு தினத்தின் போது, நடத்தும் தாக்குதலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் வகையிலும் அடுத்த கட்ட தாக்குதலை நடத்துவதற்கும் அவர்கள் திட்டங்களை உருவாக்கி இருந்தார்கள்.

    முதலாவது தாக்குதலை டெல்லியில் நடத்த திட்டமிட்ட அவர்கள் அதன் பிறகு நாடு முழுவதும் பல இடங்களிலும் தாக்குதல் நடத்துவதற்கும் முடிவு செய்து இருந்தனர்.

    ஆனால், போலீஸ் வலையில் வசமாக சிக்கியதால் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது முப்தி முகமது சுகாயில், அனஸ் யூனுஸ், ரஷீத் ஜாபர், சயீத், ரகீஸ் அகமது, சுபாயர் மாலிக், சயித் மாலிக், சாகிப் இப்தேகர், முகமது இர்சாத், முகமது ஆசம் ஆகிய 10 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கைதானவர்களில் ரசீத் சாபர், சயீத் இருவரும் அண்ணன்- தம்பி ஆவர். இவர்களில் சயீத் அம்ரோகா நகரில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். அவர்தான் ராக்கெட் லாஞ்சர் தயாரித்து கொடுத்தார்.

    முகமது ஆசம் என்பவர் டெல்லி சீலம்பூரில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். அவர்தான் வெடி பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

    போலீசார் டெல்லியில் சிலாம்பூரிலும், உத்தரபிரதேசத்தில் லக்னோ, அம்ரோகா, ஹபுர், மீரட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுவதால் மேலும் சோதனைகள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×