search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை மோடியை தூங்கவிட மாட்டோம் -ராகுல் காந்தி
    X

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்வரை மோடியை தூங்கவிட மாட்டோம் -ராகுல் காந்தி

    ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Farmsloans #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது இந்த மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

    அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக நேற்று பதவியேற்ற அசோக் கெலாட் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

    அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் மந்திரியாக பதவியேற்ற  பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பின் மூலம் அம்மாநிலத்தில் உள்ள கிராம வளர்ச்சி வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்துக்காக கடன் வாங்கிய சுமார் 16.65 லட்சம் மக்கள் பயனடைவார்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியில் இன்று பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, அனில் அம்பானி உள்பட நாட்டில் உள்ள 15 தொழிலதிபர்கள் தொடர்பான கடன்பாக்கி பற்றி பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை கடந்த நான்காண்டுகளில் நிறைவேற்ற தவறி விட்டதாக குற்றம்சாட்டினார்.

    5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். ஆனால், ஆறே மணி நேரத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்.

    இதேபோல், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் உள்ள விவசாய கடன்கள் அனைத்தையும் மத்திய அரசு தள்ளுபடி செய்யும்வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்தார்.  #Farmsloans #RahulGandhi #PMModi

    Next Story
    ×