search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டைகூட குறை கண்டுபிடிப்பதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
    X

    சுப்ரீம் கோர்ட்டைகூட குறை கண்டுபிடிப்பதா? - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்

    சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் தயாராக உள்ளனர் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    லக்னோ:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வந்த அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைத்ததுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    ரேபரேலியில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்ட மோடி, அங்கு தயாரிக்கப்பட்ட 900-வது ‘ஹம்சபர்’ ரெயில் பெட்டியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்டார்.

    பின்னர், ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ரேபரேலியின் வளர்ச்சிக்காக முந்தைய காங்கிரஸ் அரசு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக மத்திய அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும் காங்கிரசார் நமது நாட்டு ராணுவ மந்திரி சொல்வதை நம்பவில்லை. விமானப்படை உயரதிகாரிகள் கூறியதை நம்பவில்லை. அவர்களை எல்லாம் பொய்யர்கள் என்று புறக்கணித்து விட்டார்கள்.

    பிறகு, பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் சொன்னதையும் நம்பவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட்டைகூட குறை காணும் அளவுக்கு அவர்கள் தயாராக உள்ளனர் என்று மோடி குறிப்பிட்டார்.



    பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் அரசின் மெத்தனப்போக்கான அணுகுமுறையை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கார்கில் போருக்கு பின்னர் நமது விமானப்படையை அதிநவீனப்படுத்த வேண்டும் என பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இதற்காக ஒன்றுமே செய்யவில்லை. 

    சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ராணுவத்துக்கு ஆயுதம் வாங்கிய போதெல்லாம் வெளிநாட்டு இடைத்தரகர்கள் நுழைக்கப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு தாய்மாமாக்களுடன் மட்டுமே ஆயுத வியாபாரம் செய்தனர்.

    இப்போது காங்கிரசாருக்கு ஒரு புது தாய்மாமா கிடைத்திருக்கிறார். அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தலைமறைவாக இருந்த கிறிஸ்டியன் மைக்கேலை நாங்கள் துபாயில் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்தோம். ஆனால், அவருக்காக கோர்ட்டில் வாதாடுவதற்காக அவசர அவசரமாக காங்கிரஸ் கட்சி தங்களது வக்கீலை ஏற்பாடு செய்து தந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்,

    இன்று பிற்பகல் ரேபரேலியில் இருந்து பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடும் பிரதமர் மோடி, இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli #SCverdict #Rafaleverdict
    Next Story
    ×