search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை
    X

    நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை

    நேபாள நாட்டில் புழக்கத்தில் இருந்து வந்த இந்திய அரசின் 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #IndianRupee #nepal
    புதுடெல்லி:

    நேபாள நாட்டில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அங்கு இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தார். புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்பின் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வந்தன.

    இந்த நிலையில் இந்திய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நேபாள தகவல் மற்றும் தொடர்பு துறை மந்திரி கோகுல்பிரசாத் பஸ்கோடா கூறியதாவது:-

    நேபாளத்தில் இந்திய அரசின் 200, 500, 2000, ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்படுகிறது.

    அதை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டாம்.

    200, 500, 2000 இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த நேபாளத்தில் சட்டப்பூர்வம் ஆக்கவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் இந்திய 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் மக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

    வருகிற 2020-ம் ஆண்டு “விசிட்நேபாள்” என்ற பெயரில் நேபாள திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு இந்த ரூபாய் நோட்டு தடை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நேபாள நாட்டில் கோடிக்கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தேங்கின. அதை இதுவரை இந்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளவில்லை.

    இதனால் கடும் அதிருப்தி அடைந்த நேபாள அரசு இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய எல்லை பகுதி மாநிலங்களில் நேபாள மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளையே பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேபாளத்தில் இந்திய புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து இருப்பதால் இந்தியா- நேபாளம் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், அதை பயன்படுத்தும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #IndianRupee #nepal
    Next Story
    ×