search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன்
    X

    குட்கா ஊழல்: விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன்

    குட்கா ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #MinisterVijayabaskar #gutkhaissue
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டெல்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. போலீசார் விசாரித்தார்கள். இருவரிடமும் தலா 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். 

    இப்போது குட்கா ஊழல் வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.  #MinisterVijayabaskar #gutkhaissue
    Next Story
    ×