search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது.



    மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இதேபோல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், ராமர் கோவில், விசாகப்பட்டினம் ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LSAdjourned
    Next Story
    ×