search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்தில் பங்கேற்பு- தமிழக எம்.பி.க்களில் சத்தியபாமா முதலிடம்
    X

    பாராளுமன்றத்தில் பங்கேற்பு- தமிழக எம்.பி.க்களில் சத்தியபாமா முதலிடம்

    திருப்பூர் தொகுதி பெண் எம்.பி. வி.சத்யபாமா 87 சதவீதம் நாட்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார். #SathyabamaMP
    புதுடெல்லி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று 2 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி வென்றது.

    வருகிற 2019-ம் ஆண்டில் இந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், தேசிய அளவில் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் வருகை பதிவேடு 80 சதவீதம் உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 சதவீதமாகவும் உள்ளது.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதம் உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம் உள்ளது. அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

    தமிழ்நாட்டை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்களில் யாரும் அனைத்து நாட்களும் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. குறைந்தது 90 சதவீதம் நாட்கள் கூட வரவில்லை.

    ஆனால் திருப்பூர் தொகுதி பெண் எம்.பி. வி.சத்யபாமா 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘பாராளுமன்றத்தில் நான் எனது தொகுதியை பாதித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினேன். அவற்றில் பெரும்பாலானவை ரெயில்வே சம்பந்தமானவை. தமிழக மக்களை பாதித்த ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு பிரச்சனைகளையும் எழுப்பினேன். விவாதத்தில் மேலும் பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற்றேன்’’ என்றார்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களில் ஈரோடு தொகுதியை சேர்ந்த செல்வகுமார் சின்னையன் எம்.பி. மிக குறைந்த அளவிலான விவாதத்தில் பங்கேற்று இருக்கிறார். அவர் 24 விவாதங்களில் கலந்து கொண்டு 92 கேள்விகள் கேட்டு இருக்கிறார். அவரது வருகை பதிவேடு 73 சதவீதமாகும்.


    அதேநேரத்தில் தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களில் பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மிக குறைந்த நாட்களே பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகை பதிவேடு 40 சதவீதமே உள்ளது. 12 விவாதங்களில் கலந்து கொண்டு 50 கேள்விகளே எழுப்பி உள்ளார்.

    பொதுவாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்து கேள்விகள் கேட்டு பதிலை பெறுவதை வைத்து மட்டுமே ஒரு எம்.பி.யின் செயல்பாடு சிறந்தது என கூறமுடியாது. தொகுதியில் அவரது செயல்பாடு சிறந்த முறையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பின் நிறுவனர் ஜெகதீப் சோக்கர் கூறியுள்ளார். ஒரு எம்.பி. பாராளுமன்றத்துக்கு வருவது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் தொகுதி மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதிக்கு தகுதியானவராக இல்லை என்பதே சரியானது என்றும் அவர் தெரிவித்தார். #SathyabamaMP
    Next Story
    ×