search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புலந்த்சாகர்  வன்முறையில் தேடப்பட்ட ராணுவ வீரர் கைது
    X

    புலந்த்சாகர் வன்முறையில் தேடப்பட்ட ராணுவ வீரர் கைது

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புலந்த்சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் கைதானார். #BulandshahrViolence #ArmymanArrested
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் கடந்த வாரம் பசுக்கள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
     
    இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர்மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. இதுதவிர 20 வயது மதிக்கத்தக்க வாலிபரும் பலியானார்.



    இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு படை போலீசார் 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வன்முறை கும்பலில் ஒருவராக காணப்பட்ட ராணுவ வீரர் ஜித்தேந்திரா மாலிக் என்பவரை போலீசார் தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலில் பாய்ந்த தோட்டா இவரது துப்பாக்கியில் இருந்து பாய்ந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்நிலையில், ஜித்தேந்திரா மாலிக்கை மீரட் நகரில் சிறப்பு விசாரணை குழு போலீசாரிடம் ராணுவ உயரதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். அவரை புலந்த்சாகர் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

    இதற்கிடையில், புலந்த்சாகர் புறநகர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் ராயீஸ் அக்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவரது பதவியில் மணிஷ் மிஷ்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பஜ்ரங்தள் தலைவர் யோகேஷ் ராஜ் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #BulandshahrViolence #ArmymanArrested
    Next Story
    ×