search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது திட்டத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்: டி.கே.சிவக்குமார்
    X

    மேகதாது திட்டத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம்: டி.கே.சிவக்குமார்

    எங்கள் நிலத்தில் நாங்கள் அணை கட்டுகிறோம். மேகதாது திட்டத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். #MekedatuDam #KarnatakaMinister
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.

    இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எச்.கே.பட்டீல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மேகதாது திட்டம் உள்பட கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    “மேகதாது திட்டம் உள்பட கர்நாடகத்தில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முக்கியமாக மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை அந்த மாநில அரசு கூட்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம்.

    நான் நாளை(அதாவது இன்று) மேகதாதுவுக்கு நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன். என்னுடன் ஊடகத்தினரையும் அழைத்து செல்கிறேன். நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இ்தன் நோக்கம். மேகதாது பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் இல்லை.

    தமிழகம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நான் தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற விவரங்களை தருகிறோம்.

    மேகதாது அணை திட்டம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    எங்களின் சட்ட நிபுணர் குழுவினர், தமிழகத்தை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இந்த திட்டம் தமிழகத்திற்கு உதவும். எங்களுக்கு இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும். அந்த நீரை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. இந்த திட்டத்தை எங்களின் சுயநலத்திற்காக மட்டும் செயல்படுத்தவில்லை.

    புதிய அணை கட்டுவதால் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலம் நீரில் மூழ்கும். இதில் பெரும்பகுதி வனப்பகுதியாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் 395 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளோம். 64 டி.எம்.சி. நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுகிறது. இந்த அணை நீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தவே மாட்டோம்.

    கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் அணை கட்டுகிறோம். நிலம், இதற்கு செலவிடப்படும் நிதி அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது. வேறு எந்த மாநிலம் மீதும் கர்நாடகத்திற்கு விரோதம் இல்லை. அதனால் தமிழகம் ஆதங்கப்பட வேண்டியது இல்லை.

    இந்த விஷயத்தில் கர்நாடகம் அரசியல் செய்யவில்லை. இதுகுறித்து முழு விவரங்களையும் தமிழகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விஷயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தமிழகம் தயாராக இல்லை என்று அந்த மாநில அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார். எங்களுடன் பேச முடியாது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் தமிழகத்துடன் தகராறு செய்ய மாட்டோம். இரு மாநிலத்தினரும் சகோதரர்கள். காவிரி நீர் கர்நாடகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு செல்ல வேண்டும்.

    மகதாயி நதி நீரை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை பயன்படுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு விஷயத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தடை ஆணையை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
    Next Story
    ×