search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
    X

    வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. #ISRO #PSLVC43
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ “ஹைசிஸ்” (ஹைபர் ஸ்பெக்ரல் இமேஜிங் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைகோளை தயாரித்துள்ளது.

    இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை கடந்த சில மாதங்களாக இஸ்ரோ நிறுவனம் செய்து வந்தது.

    இதற்கிடையே அமெரிக்கா தனது 23 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவை நாடியது. அதுபோல ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, ஆலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் தங்களது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவிடம் உதவி கேட்டன.

    இதையடுத்து 8 வெளிநாடுகளின் 30 செயற்கைக் கோள்களுடன் இந்தியாவின் “ஹைசிஸ்” செயற்கைக் கோளையும் சேர்த்து மொத்தம் 31 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ ஏற்பாடு செய்தது.

    31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் நேற்று அதிகாலை 5.55 மணிக்கு தொடங்கியது.



    இன்று அதிகாலை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து ராக்கெட் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இன்று அதிகாலை சரியாக 9.57 மணிக்கு சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் புறப்பட்டது. தீ பிழம்புகளை கக்கியபடி விண்ணில் பாய்ந்த அந்த ராக்கெட் வெற்றிகரமாக தனது பாதையில் பயணம் செய்தது.

    பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் பயணத்தின் வெற்றியை கண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஒரே சமயத்தில் 31 செயற்கைக்கோள்களுடன் பயந்த பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் அடுத்தடுத்து தனது பணிகளை செய்தது.

    அந்த ராக்கெட்டில் 4 பிரிவுகளில் எரிபொருள் வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட தூரங்களில் அவை ஒவ்வொன்றாக பிரிந்தன.

    சூரியன் மண்டலத்தில் சுற்றுவட்ட பாதையில் 504 கிலோ மீட்டர் தொலைவில் அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்களும், மற்ற 7 நாடுகளின் செயற்கைக் கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. 17-வது நிமிடத்தில் 630 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் “ஹைசிஸ்” செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் அனைத்தும் தங்களது பணிகளை செய்தன. ஸ்ரீஹரிகோட்டா, பெங்களூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்ரோ மையங்களுடன் செயற்கைக்கோள்கள் தொடர்பை ஏற்படுத்தின. இதன் மூலம் இன்றைய விண்வெளி ஆய்வு பணியில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    விண்வெளி ஆய்வு துறையில் அமெரிக்கா, ரஷியா நாடுகளுக்கு சவால் விடும் வகையில் இன்று 31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை பறக்க விட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோவின் தயாரிப்பில் உருவாகும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 45-வது ராக்கெட் ஆகும். இந்த 45-வது பயணமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த ராக்கெட் மூலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள “ஹைசிஸ்” செயற்கைக்கோள் 350 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் மூலம் விவசாயம், வன வளம், புவி மேற்பரப்பு, கடலோர பகுதிகள், உள்நாட்டு நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

    மேலும் இந்த பிரிவுகளில் உள்ள பகுதிகளை மிக மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் ஆற்றல் “ஹைசிஸ்” செயற்கைக்கோளுக்கு இருக்கிறது.

    குறிப்பாக அடர்ந்த காடுகளுக்குள் நடமாடும் மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்து தெரிவிக்கும் வகையில் “ஹைசிஸ்” செயற்கைக்கோளில் அதிநவீன ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமரா உள்ளது. எனவே மாவோயிஸ்டுகளை வேட்டையாட இந்த செயற்கைக்கோள் உதவும்.

    அதுபோல செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்துபவர்களை கண்டுபிடித்து காட்டவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். புவி மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்க முடியும் என்பதால் இந்த செயற்கைக்கோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த செயற்கைக்கோளை 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு இந்தியா வெற்றிகரமாக செலுத்தி உள்ள 6-வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    தட்பவெட்ப நிலை மாற்றம், நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கும் உதவும் வகையில் ஹைசிஸ் செயற்கைக் கோள் பூமியை மிக மிக துல்லியமாக படம் பிடிக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் நாசா விஞ்ஞானிகளும் இந்த செயற்கைக்கோளை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். #ISRO #PSLVC43

    Next Story
    ×