search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் வழக்கில் அறிக்கை தாக்கல்- தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
    X

    ஸ்டெர்லைட் வழக்கில் அறிக்கை தாக்கல்- தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #NationalGreenTribunal #SterliteCase
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் கூறியது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #NGT #NationalGreenTribunal #SterliteCase
    Next Story
    ×