search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா, ஜோஷி மீதான புகார்கள் குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை
    X

    அமித்ஷா, ஜோஷி மீதான புகார்கள் குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை

    பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் இடையே நடைபெற்றுவரும் வார்த்தை போர் குறித்து இருதரப்பினரும் தேர்தல் கமிஷனில் புகார் செய்துள்ளனர். அமித்ஷா, சி.பி.ஜோஷி ஆகியோர் மீதான புகார் குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்திவருகிறது. #ElectionCommission #AmitShah #CPJoshi
    ஜெய்ப்பூர்:

    5 மாநில தேர்தல்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினரும், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பிரதமர் மோடியின் பெற்றோர், சாதி என தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்கள். முன்னாள் மத்திய மந்திரியும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முன்னணி தலைவருமான சி.பி.ஜோஷி தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடியின் சாதி பற்றி பேசினார்.



    இதுகுறித்து பா.ஜனதா கட்சி தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. தேர்தல் கமிஷனும் விளக்கம் கேட்டு சி.பி.ஜோஷிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சி.பி.ஜோஷி தனது முதற்கட்ட பதிலை தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அதில், முழுமையான விளக்கம் அளிக்க தனக்கு காலஅவகாசம் வழங்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதேபோல பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஜெய்ப்பூரில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரத்தில் பேசியது குறித்து மாநில காங்கிரஸ் சட்டப்பிரிவு பொறுப்பாளர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த் குமாரிடம் புகார் அளித்துள்ளார். அமித்ஷா பேச்சு அடங்கிய ஒரு வீடியோவையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

    அதில் அமித்ஷா, “மக்கள் நலனுக்காக காங்கிரஸ் செய்த காரியங்கள் என்னவென்று அவர்கள் ஓட்டு கேட்டு வரும்போது மக்கள் அவர்கள் சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும்” என்று பேசியுள்ளார். மேலும் இதுபோன்ற வேட்பாளர்கள் உங்கள் கிராமத்துக்குள், ஏரியாவுக்குள் வருவதையும், பிரசாரத்தில் ஈடுபடுவதையும் தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    தேர்தல் கமிஷன் அமித்ஷாவின் சர்ச்சை கருத்து குறித்து அவர் பேசியதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறது.

    இவர்கள் தவிர காங்கிரஸ் தலைவர்கள் ராஜ்பப்பர், விலாஸ்ராவ் முத்தெம்வார் ஆகியோரும் பிரதமர் மோடியின் பெற்றோர் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டனர். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்.

    மோடியும் கடந்த 3 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் குறித்து கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    பதிலுக்கு ராகுல் காந்தியும் பிரதமர் மோடியை, பொய்யர், வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர், ஊழல்வாதி, நாட்டை நிர்மாணித்த தலைவர்களை இழிவுபடுத்துபவர் என்று விமர்சனம் செய்துவருகிறார்.
    Next Story
    ×