search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல்- ராகுல் கடும் பாய்ச்சல்
    X

    மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல்- ராகுல் கடும் பாய்ச்சல்

    சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் என்று ம.பி. தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசினார். #rahulgandhi #pmmodi #demonetisation

    போபால்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் தியோரி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாட்டில் உள்ள ஊழலை ஒழிக்கப் போவதாக பிரதமர் மோடி பேசி வந்தார். இப்போது தன்னை நாட்டின் காவலாளி என்றும், ஊழலை ஒழிக்க தான் பாடுபட்டு வருவதாகவும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இப்போது அப்படி கூறினால் நீங்கள் நாட்டின் காவலாளி இல்லை. திருடன் என்று மக்கள் கூறி விடுவார்கள்.

    பிரான்சிடம் இருந்து தலா ரூ.526 கோடி வீதம் 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் விமானப் படையிடமோ அல்லது அப்போதைய பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கரிடமோ ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அந்த ஒப்பந்தத்தை மோடி ரத்து செய்தார்.

    அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்தையும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ள அவர் பிரான்ஸ் நாட்டிடம் கோரிக்கை விடுத்ததாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொலாந்த் தெரிவித்துள்ளார்.

    இதற்காக ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானிக்கு மோடி வழங்கியுள்ளார். நாட்டின் காவலாளி என்று தன்னை அறிவித்துக் கொண்ட மோடி இதன் மூலம் சில தொழில் அதிபர்களின் காவலாளியாக மாறி விட்டார்.


    சுதந்திர இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல் ஆகும். அப்போது நேர்மையாக, வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அனைவரையும் மோடி வங்கிகளின் வாசலில் நிற்க வைத்தார். அப்போது அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்கள் யாரும் வங்கிகள் முன்பு நிற்கவில்லை.

    கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் என்றால் பொதுமக்கள் மட்டும் ஏன் வங்கிகளின் முன்பு நின்றார்கள். கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் வங்கிகளின் பின்வாசல் வழியாக சென்று அதனை மாற்றி விட்டார்கள்.

    மக்களின் பணத்தை மோடி திருடி விஜய் மல்லையா, நீரவ்மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழில் அதிபர்களிடம் கொடுத்து அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல உதவி புரிந்துள்ளார்.

    விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யுமாறு மோடியிடம் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் தொழில் அதிபர்களின் கடனை மட்டுமே தள்ளுபடி செய்து வருகிறார். அவரால் மேலும் பல தொழில் அதிபர்கள் பலன் அடைய உள்ளனர்.

    இந்தியாவில் தயாரிப்போம் என்பது போன்ற பல திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினாலும் 24 மணி நேரத்துக்கு 450 வேலை வாய்ப்புகளையே இந்தியா உருவாக்கி வருகிறது. ஆனால் சீனா 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #rahulgandhi #pmmodi #demonetisation

    Next Story
    ×