search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது
    X

    காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது. #Kashmirpanchayatelection
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.

    காஷ்மீர் மற்றும் ஜம்மு வட்டாரங்களில் ஏற்கனவே 85 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1676 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 420 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1845 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 5585 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதற்காக காஷ்மீர் பகுதியில் 1303 வாக்குச்சாவடிகள், ஜம்முவில் 1993 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் காஷ்மீர் பகுதிக்குட்பட்ட 491 வாக்குச்சாவடிகள்,  ஜம்முவில் உள்ள 196 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 687 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.



    இந்நிலையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றன. பிற்பகல் 2 மணியுடன் இன்றைய வாக்குப்பதிவு நிறைவடையும்.

    இன்று பதிவாகும் வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection

    Next Story
    ×