search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு
    X

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

    மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. #SabarimalaTemple
    சபரிமலை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். நடை திறக்கப்பட்ட மறுநாள் (17-ந் தேதி) அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மாலை 5 மணிக்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்படும். தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.என்.நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18 படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்படுவார்கள். இரு மேல்சாந்திகளையும் படியிறங்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி 18-ம் படி வழியாக அழைத்து செல்வார். 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

    அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.

    அன்யை தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

    பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.

    ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, சபரிமலையில் இந்த ஆண்டு 25 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி 2 லட்சம் டின் அரவணை தயாரிக்கும் வகையில் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு பம்பை, சன்னிதானத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநில டி.ஜி.பி. லோகநாத் பெகரா தெரிவித்தார்.

    பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்தும் முதல் கட்டமாக 400-க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறது. சபரிமலைக்கு செல்வதற்கான முன்பதிவையும் கேரள அரசு போக்குவரத்து கழகம் செய்துள்ளது. இதற்கிடையே பத்தனம்திட்டை-பம்பை இடையேயான கட்டணத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் ரூ.73-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தியதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே சபரிமலை விவகாரத்தில் 48 சீராய்வு மனுக்களை ஜனவரி 22-ந் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. மேலும் நாளை சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. எனவே இன்று (வியாழக்கிழமை) முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×