search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
    X

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக்வர்மா வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. அப்போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணை அறிக்கையை பரிசீலிக்கும். #SupremeCourt #CBI #AlokVerma
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்தபோது, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 2 பேரின் அதிகாரத்தையும் ஒரே நாளில் பறித்து, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

    கடந்த மாதம் 23-ந் தேதி எடுக்கப்பட்ட மத்திய அரசின் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளான அலோக் வர்மா, அந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

    அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக சென்ற மாதம் 26-ந் தேதி விசாரித்தது.



    அப்போது, அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், முதல் கட்ட விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும், இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளையோ, எந்த விதமான கொள்கை முடிவுகளையோ எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    அத்துடன் நாகேஸ்வரராவ் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் எடுத்துள்ள முடிவுகளை (விசாரணைகள் மாற்றம், விசாரணை அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவை) மூடி முத்திரையிட்ட உறையில் நவம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியது.

    இந்த உத்தரவுகளை தொடர்ந்து கே.வி.சவுத்ரி தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அலோக் வர்மாவிடம் விசாரணை நடத்தியது.

    ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் அடிப்படையில், மத்திய மந்திரிசபை செயலாளரின் ஆகஸ்டு 24-ந் தேதியிட்ட கடிதத்தின் (குறிப்பின்) படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு அலோக் வர்மா விரிவான விளக்கம் அளித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளது. அப்போது தாக்கல் செய்யப்படுகிற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நீதிபதிகள் பரிசீலிப்பார்கள்.

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து அது தொடர்பான உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பிப்பார்கள்.

    இதற்கிடையே சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக பின்னர் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ‘காமன்காஸ்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

    Next Story
    ×