search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் ரொக்க ஜாமினில் விடுதலை
    X

    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் ரொக்க ஜாமினில் விடுதலை

    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை ரொக்க ஜாமினில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. #CBIDSP #DevenderKumar #DevenderKumarbail
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய  சி.பி.ஐ.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.  தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கைதான டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை கடந்த 23-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காவல் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு தேவேந்திர குமார் முன்னர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி 50 ஆயிரம் ரூபாய் சொந்தப் பணம் மற்றும் அதே தொகைக்கான மற்றொருவரின் காப்புறுதியில் தேவேந்திர குமாரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.  #CBIDSP #DevenderKumar #DevenderKumarbail  
    Next Story
    ×