search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினி சர்ஜிக்கல் - பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப்படை குண்டு மழை
    X

    மினி சர்ஜிக்கல் - பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப்படை குண்டு மழை

    பூஞ்ச் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. #JammuKashmir

    புதுடெல்லி:

    பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து நாசவேலை செய்யும் கோழைத்தனமான செயலை அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் செய்து வருகிறது.

    அதோடு எல்லையில் ஊடுருவி வந்து நமது வீரர்கள் மீது திடீர் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் நடத்துகிறது.

    கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியம் எல்லை மீறி சென்றது. இதையடுத்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய விமானப்படை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதிரடியாக துல்லிய தாக்குதலை நடத்தியது.

    அந்த துல்லிய தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதோடு பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி பெற்ற முகாம்களும் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்த துல்லிய தாக்குதல் மிகப்பெரும் இழப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

    இந்திய விமானப்படை தக்க பாடம் கொடுத்ததால் பாகிஸ்தான் ராணுவமும், பயங்கரவாதிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்து மீறலை நிறுத்தியது. பயங்கரவாதிகளும் வாலை சுருட்டி வைத்திருந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பயங்கரவாதிகளும் எல்லை மீறி நடந்து வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி காஷ்மீரின் எல்லையோர பகுதிகளான பூஞ்ச் மற்றும் ஜலாலாவில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நமது எல்லைக்குள் வந்து தாக்குதல் நடத்தினார்கள்.

    பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்திய விமானப்படை எச்சரித்து வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு மீண்டும் பாடம் புகட்டும் இந்திய விமானப்படை “மினி சர்ஜிக்கல்” எனப்படும் சிறிய துல்லிய தாக்குதலை நடத்தியுள்ளது.

     


    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிர்வாக தலைமையகம் உள்ளது. அந்த ராணுவ தலைமையகம் மீது இந்திய விமானப் படை விமானங்கள் குண்டு மழை பொழிந்து துல்லிய தாக்குதலை மேற்கொண்டன.

    பூஞ்ச் மற்றும் ஜலாலாவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்திய போது, உடனடியாக அது தொடர்பான படங்கள், வீடியோ காட்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    ஆனால் இந்த தடவை மினி சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் அந்த தாக்குதல் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

    அதில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்துவதும் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் குண்டு வீச்சுக்குள்ளாவதும் தெரிகிறது. மேலும் குண்டு மழை பொழியப்பட்ட இடத்தில் இருந்து வெண்புகை பல மீட்டர் உயரத்துக்கு கிளம்பி இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சர்ஜிக்கல் தாக்குதலின் போது பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதில் இந்திய விமானப்படை மிகவும் கவனமாக இருந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுகள் வீசப்படவில்லை. குராட்டா மற்றும் சமணி ஆகிய 2 இடங்களில் மட்டுமே சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் இருந்து புகை எழுந்ததை இந்திய எல்லையோர கிராம மக்கள் பார்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து எல்லையோர கிராமங்களில் பீதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லையில் ராணுவ பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படை நடத்தியுள்ள மினி சர்ஜிக்கல் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிர்வாக தலைமையகத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சேத முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. #JammuKashmir

    Next Story
    ×