search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவை கைது செய்ய தடை
    X

    ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவை கைது செய்ய தடை

    ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #CBI #CVC #CBISpecialDirector #RakeshAsthana #DelhiHighCourt
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

    இந்த நிலையில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை ராகேஷ் அஸ்தானா குழுவினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் மொயின் குரேஷியுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சி.பி.ஐ.யின் சந்தேகப்பார்வை விழுந்தது.



    இந்த வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என மத்திய மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    ஆனால் இதில் அதிரடி திருப்பமாக சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என கூறி உள்ளார்.

    அந்தப்புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

    முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.

    இது தொடர்பான சி.பி.ஐ. மனுவை நீதிபதி சந்தோஷ் சினேகி மான் விசாரித்து, தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதற்கு மத்தியில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்தார். அவர், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ., சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ஏ.கே. சர்மா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

    மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி நஜ்மி வாஜிரி 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் ராகேஷ் அஸ்தானா விவகாரத்தில் தற்போதைய நிலை தொடரவும், அவரை கைது செய்வதில் இருந்து இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். 
    Next Story
    ×