search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு கப்பலில் உயிரை பணயம் வைத்து செல்பி - மன்னிப்பு கேட்டார் முதல் மந்திரி மனைவி
    X

    சொகுசு கப்பலில் உயிரை பணயம் வைத்து செல்பி - மன்னிப்பு கேட்டார் முதல் மந்திரி மனைவி

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் இருந்த சொகுசு கப்பலில் செல்பி எடுத்தமைக்காக மகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie #AmrutaFadnavisapologises
    மும்பை:

    இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தனர்.

    அங்க்ரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் வாரம் 4 முறை மும்பையில் இருந்து கோவா சென்று திரும்பும்.

    399 பயணிகள் மற்றும் 67 பணியாளர்கள் இதில் செல்லலாம். 8 வித கட்டணங்களில் அறைகள் மற்றும் நீச்சல் குளம், மனமகிழ் கூடம் ஆகியவை இந்த சொகுசு கப்பலில் உள்ளன. வாரம் 4 முறை செல்லும் இந்த பயணத்துக்கான கட்டணமாக 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சொகுசு கப்பலின் முதல் பயணத்தின் தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் வந்திருந்தார். சொகுசு கப்பலில் அழகில் மெய்மறந்த அம்ருதா பட்னாவிஸ் பலவித கோணங்களில் நின்று தனது கைபேசியால் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.


    உற்சாக மிகுதியினால் ஒருகட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்குள் தாவி குதித்தார். இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரும், அம்ருதாவின் பாதுகாவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

    அம்ருதாவின் அஜாக்கிரதையை பலர் குற்றம்சாட்டி கருத்துகளை பதிவிட்டனர். ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியின் மனைவியை உயிரை பணயம் வைத்து இப்படி நடந்து கொள்வது முறையா? என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.


    இந்நிலையில், மராத்தி மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த அம்ருதா பட்னாவிஸ், ‘நான் ஏதாவது தவறு செய்ததாக சிலர் கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    நான் செல்பி எடுக்க முயன்ற இடம் அவ்வளவு ஆபத்தான பகுதி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், இதுபோல் செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் சவாலான காரியங்களில் ஈடுபட கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். #AmrutaFadnavis  #AmrutaFadnavisselfie #AmrutaFadnavisapologises 
    Next Story
    ×