search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் பலி
    X

    கர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் பலி

    ஆந்திர மாநிலம் கர்னூலில் இன்று அதிகாலை சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #AndhraAccident
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு மண்டலம் பெத்த ஓத்தூரு பகுதியை சேர்ந்தவர் ஷேக் காஜா (வயது 27). இவரது மனைவி பாத்திமா.

    இவர்களது குழந்தைக்கு மொட்டை போடுவதற்காக தங்களது உறவினர்கள் 21 பேருடன் 3 லோடு ஆட்டோவில் கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அதிகாலை சென்றனர்.

    கர்னூல் அருகே அவர்கள் சென்ற போது ஒரு ஆட்டோ திடீரென பழுதானது. ஆட்டோவை டிரைவர் சரி செய்து கொண்டிருந்தார். ஆட்டோவில் வந்தவர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது.

    இதில் ஷேக் காஜா, பாத்திமா , உசேன் (வயது 23), ஆசிப் (7), அப்சரா (9), மெஜித் (7) ஆகிய 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 15 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கர்னூல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகின்றனர்.  #AndhraAccident
    Next Story
    ×