search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச நாடுகளின் வளர்ச்சியை காயப்படுத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு - பிரதமர் மோடி வேதனை
    X

    சர்வதேச நாடுகளின் வளர்ச்சியை காயப்படுத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு - பிரதமர் மோடி வேதனை

    பெட்ரோலிய நிறுவன உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளின் வளர்ச்சியை கச்சா எண்ணெயின் விலை உயர்வு காயப்படுத்துவதாக குறிப்பிட்டார். #PetrolDiesel #PriceHike #Modi
    புதுடெல்லி:

    நாளுக்குநாள் உயர்ந்துவரும்  கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 5-1-2016 அன்று இந்திய எரிசக்தி அமைப்பின் உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவின் முதல் கூட்டத்தின்போது ஆழ்கடலில் இருந்து இயற்கை எரிவாயுவை குறைந்த செலவில் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது இந்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.எஸ்.சி. மற்றும் உள்நாட்டில் கச்சா எண்ணெய் தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசின் சார்பில் ஈவுத்தொகை அளிக்க பரிந்துரைக்கப்பட்டது.

    ஆனால், இந்த முடிவுக்கு ஓ.என்.ஜி.எஸ்.சி. அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையில், நம் நாட்டில் ஆண்டுதோறும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் நுகர்வுத்திறன் ஆண்டுதோறும் 5 முதல் 6 சதவீதம் அதிகரித்துகொண்டு வருவதால் பற்றாக்குறையை ஈடுகட்ட 83 சதவீதம் அளவுக்கு இறக்குமதியை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் நீடிக்கிறது.

    இந்த நிலையை மாற்றவும், வரும் 2022-ம் ஆண்டுக்குள் இறக்குமதியை வெகுவாக குறைத்து, உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீர்மானித்தது.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று உள்நாட்டு, வெளிநாடுகளின் பெட்ரோலிய நிறுவன உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த அமைப்பின் மூன்றாவது ஆலோசனை கூட்டத்தில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி காலித் அல்-ஃபாலி மற்றும் இதர நாடுகளை சேர்ந்த பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள், மேலாண்மை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவது குறித்து இந்த கூட்டத்தில் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது சர்வதேச பொருளாதாரத்தை காயப்படுத்துவதாக குறிப்பிட்டார். இந்த காயத்தின் வலி இந்தியாவில் உள்ள நுகர்வோரை வேதனைப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    கடந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தின்போது கலந்து கொண்டவர்கள் கூறிய அனைத்து ஆலோசனைகளையும் இந்த அரசு ஏற்றுக்கொண்ட பிறகும் இந்தியாவில் பெட்ரோலிய உற்பத்தி துறையில் முதலீடு செய்ய யாரும் இன்னும் முன்வராதது ஏன்? என்றும் பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டதாக தெரிகிறது.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய சவுதி அரேபியா பெட்ரோலியத்துறை மந்திரி காலித் அல்-ஃபாலி, பொன் முட்டை இடும் கோழியை (இந்திய நுகர்வோர்) கொல்ல வேண்டாம் என பிரதமர் மோடி எங்களிடம் (கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகள்) உரக்கவும், தெளிவாகவும் தெரிவித்தார்.

    ஆனால், நாங்கள் இல்லாவிட்டால் உங்கள் நாட்டின் நுகர்வோருக்கு ஏற்படும் வலி மிகவும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா மாற்று உற்பத்தி துறையில் நாங்கள் செய்த முதலீட்டால் உங்களுடைய வலி குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    இந்த கூட்டத்தில் உரையாற்றிய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலைகளால் இந்தியா கடுமையான புயலை சந்தித்து வருவதாக கூறினார். குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் அமெரிக்க டாலரின் மதிப்பில் 50 சதவீதத்துக்கு விலை அதிகரித்துள்ள நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை வைத்து பார்க்கையில் இங்கு 70 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

    நவம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் எதிரிநாடான ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக்கொள்ளா விட்டால் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாகவும், அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்பாகவும் நேற்றைய ஆலோசனை கூட்டத்தின்போது விரிவாக விவாதிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #PetrolDiesel #PriceHike #Modi

    Next Story
    ×