search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - கேரள அரசு சமரச முயற்சி
    X

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு - கேரள அரசு சமரச முயற்சி

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், கேரள அரசு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மன்னர் குடும்பம்-தந்திரியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. #Sabarimala #KeralaGovernment

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை அய்யப்பன் கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் அய்யப்ப பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    ஆனால் கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வர வேற்றது. தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலையை பாதுகாப்போம் என்ற கோ‌ஷத்துடன் போராட்டத்தில் குதித்தனர். நாயர் சர்வீஸ் சொசைட்டியை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர்.

    இவர்களுடன் சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரிகள், சபரிமலை கோவிலுடன் தொடர்புடைய பந்தளம் ராஜகுடும்பத்தினர் கைகோர்த்தனர்.

    இவர்கள் தலைமையில் சபரிமலையை பாதுகாப்போம் என்ற போராட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது.

     


    போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பம்பை, நிலக்கல், பந்தளம், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, பாலக்காடு, பாறசாலை என மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த போராட்டம் தீயாய் பரவியது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேரள அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம், தேவசம் போர்டு மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் ஆகியோர் வீடுகளையும் முற்றுகையிட்டனர்.

    அய்யப்ப பக்தர்களின் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அவர்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கேரள அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சபரிமலையை பாதுகாப்போம் அமைப்பு ஆகியவை இணைந்து கடந்த 10-ந்தேதி பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கண்டன பேரணி தொடங்கினர்.

    இந்த பேரணியில் லட்சக் கணக்கான பெண்களும், அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் முக்கிய நகரங்கள் வழியாக நேற்று திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர்.

     


    திருவனந்தபுரத்தில் முதல்- மந்திரி பினராய் விஜயன் வீடு நோக்கி புறப்பட்ட பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பேரணியில் வந்தவர்கள் அங்கேயே தங்கினர்.

    இன்று பேரணியில் வந்தவர்கள் திருவனந்தபுரம் தலைமைச்செயலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சர்வதேச இந்து பரி‌ஷத் தலைவர் பிரவின் தொகாடியா கூறியதாவது:-

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக கேரளாவில் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெறுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். பக்தர்களின் மத உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த தீர்ப்பை முறியடிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 2 நாட்களில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 17-ந்தேதி நள்ளிரவு முதல் 18-ந்தேதி நள்ளிரவு வரை 24 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். அவசர சட்டம் கொண்டுவரா விட்டால் மத்திய அரசை இந்துக்களுக்கு எதிரான அரசாக கருதுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மறு நாள் (17-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட இருக்கிறது. சுத்தி பூஜைக்கு பிறகு மறுநாள் 18-ந்தேதி அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பெண்களும் கோவிலுக்குள் வர வாய்ப்பு உள்ளது. திருப்திதேசாய் போன்ற பெண் ஆர்வலர்கள் கோவிலுக்கு வருவதாக கூறியுள்ளனர். பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆச்சாரங்களுக்கு எதிராக கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்பிரச்சினைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர கேரள அரசு முடிவு செய்துள்ளது.

    இதையடுத்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபடும் அய்யப்ப பக்தர்களை சமரச படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக போராட்டத்தில் தீவிரம் காட்டும் அமைப்புகள், கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம் ஆகியோரை பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது.

    கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுத்தாக்கல் செய்வதாக அறிவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இது பற்றி பேசி முடிவெடுப்போம் என்று கேரள அரசு மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. நாளை இது தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கிறது.

    இது பற்றி பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகளுக்கு கேரள அதிகாரிகள், தேவசம் போர்டு நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டக்குழுவினருடன் ஆலோசித்து இன்று மாலை முடிவு தெரிவிப்பதாக பந்தளம் மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகள் கூறும் போது, சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கேரள அரசு உடனடியாக நிறை வேற்ற ஆர்வம் காட்டுவது ஏன்? இதனை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய தயங்குவதன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இவற்றிற்கு கேரள அரசு தெரிவிக்கும் பதிலை பொறுத்தே இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி நாயர் சர்வீஸ் சொசைட்டியின் அய்யப்ப பெண் பக்தர்கள் சங்கம், தந்திரி குடும்பத்தினர், பந்தளம் ராஜகுடும்பம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 10-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் தசரா பண்டிகை விடுமுறைக்கு பிறகே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. #Sabarimala #KeralaGovernment

    Next Story
    ×