search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு
    X

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக மறுத்துவிட்டார். புகார் கூறியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் அறிவித்து உள்ளார். #MeToo #MJAkbar
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்து வருபவர் எம்.ஜே.அக்பர். பா.ஜனதா சார்பில் மத்திய பிரதேசத்தில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.

    அப்படி பத்திரிகை ஆசிரியராக எம்.ஜே.அக்பர் பணியாற்றிய காலத்தில், சக பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு செய்தியாளர்கள் உள்பட 11 பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்க வேண்டும் என காங்கிரஸ், சிவசேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா நேற்று கேள்வி எழுப்பினார்.



    இதேபோல் பா.ஜனதா கட்சியினரிடையேயும் மந்திரிக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த புகார்களை விசாரிக்க வேண்டும் எனவும், இந்த புகார்கள் குறித்து எம்.ஜே.அக்பர் பதில் அளிக்க வேண்டும் எனவும் சக பெண் மந்திரிகளான மேனகாகாந்தி, ஸ்மிரிதி இரானி ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பாலியல் புகாரில் சிக்கியுள்ள மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள், பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தை காக்கும் வகையில் பாலியல் தொல்லை தடுப்புச்சட்டத்தை சரியான முறையில் அமல்படுத்த வலியுறுத்தினர்.

    இந்த புகார்கள் குறித்து பா.ஜனதா தலைமை தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தநிலையில், ‘இந்த பிரச்சினை குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’ என கட்சித்தலைவர் அமித்ஷா முதல் முறையாக நேற்றுமுன்தினம் அறிவித்தார். இந்த புகார் தொடர்பாக தனது கருத்தை எம்.ஜே.அக்பர் வெளியிட்ட பின் அவரிடம் கட்சித்தலைமை விசாரிக்கும் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறி உள்ளன.

    இதற்கிடையே மந்திரி எம்.ஜே.அக்பர் பதவி விலகியதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி வைத்ததாகவும் நேற்று தகவல் வெளியானது. மேலும் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்திப்பதற்கு அவர் நேரம் கேட்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் அந்த செய்திகளை மத்திய அரசு வட்டாரங்கள் பின்னர் மறுத்து விட்டன.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த மந்திரி எம்.ஜே.அக்பர் நேற்று காலையில் டெல்லி வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு எந்த பதிலும் அளிக்காத எம்.ஜே.அக்பர், இது தொடர்பாக பின்னர் அறிக்கை வெளியிடுவேன் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

    அதன்படி மாலையில் அறிக்கை வெளியிட்ட மந்திரி எம்.ஜே.அக்பர், தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அதில் கூறி உள்ளார். இதன் மூலம் ராஜினாமா கோரிக்கையை அவர் நிராகரித்து உள்ளார். அவர் அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-

    என் மீது கூறப்பட்டு உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை. என்னை அவமதிக்கும் நோக்கில் கூறப்பட்டவை. ஆதாரம் இல்லாமல் கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் சில துறைகளில் வேகமாக பரவி இருக்கின்றன.

    இந்த தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது புகழ் மற்றும் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளது. அடிப்படை ஆதாரமற்ற இந்த கடுமையான குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, இந்த விவகாரத்தை எனது வக்கீல்கள் ஆய்வு செய்வார்கள்.

    இந்த பிரச்சினையை, ஓராண்டுக்கு முன் வெளியிட்ட ஒரு கட்டுரை மூலம் பிரியா ரமணி தொடங்கி வைத்தார். ஆனால் அதில் அவர் எனது பெயரை வெளியிடவில்லை. ஏனெனில் இதில் உண்மையில்லை என்பது அவருக்கே தெரியும்.

    அந்த கட்டுரையில் எனது பெயரை ஏன் குறிப்பிடவில்லை? என சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட போதுகூட, ‘அவர் (எம்.ஜே.அக்பர்) எதுவும் செய்யவில்லை என்பதால், அவரது பெயரை வெளியிடவில்லை’ என தெரிவித்து இருந்தார். அப்படி தொடக்கத்திலேயே இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    மேலும் நான் நீச்சல் குளத்தில் வைத்து விருந்தளித்ததாக அஞ்சு பாரதி என்ற பெண் அபத்தமான குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். ஆனால் எனக்கு நீச்சலே தெரியாது.

    இதைப்போல 21 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகை அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கசாலா வகாப் என்ற பெண் கூறியிருக்கிறார். ஒரேயொரு பத்திரிகையில் மட்டும்தான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அங்கு சிறிய அறையில்தான் ஆசிரியர் குழு செயல்பட்டு வந்தது.

    அதில் எனக்கு பிளைவுட் மற்றும் கண்ணாடி பொருத்தப்பட்ட ஒரு மிகச்சிறிய அறை தரப்பட்டு இருந்தது. அதற்குள் என்ன நடந்தாலும் வெளியில் தெரியும். ஏனெனில் அதில் இருந்து 2 அடி தூரத்தில் சக ஊழியர்கள் பணி செய்து கொண்டிருப்பர். அந்த அறைக்குள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது.

    நான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வீணு சாண்டல் என்பவரிடம் புகார் தெரிவித்ததாக கசாலா கூறியுள்ளார். ஆனால் கசாலாவின் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என வீணு சாண்டல், பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 ஆண்டுகளில் என் மீது பாலியல் தொடர்பாக எந்தவொரு புகாரும் எழவில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.

    பாலியல் தொல்லை சம்பவம் நடந்ததாக கூறப்படும் காலத்துக்கு பின்னரும் பிரியா ரமணி மற்றும் கசாலா ஆகியோர் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். அப்படியென்றால் என்னால் அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தானே அர்த்தம்?

    அப்படியென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இந்த புகார்கள் கிளம்பியிருப்பதன் நோக்கம் என்ன? இது தொடர்பாக ஏதாவது திட்டம் இருக்கிறதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வெறும் அரசியல் நோக்கத்துக்காகவே இந்த பிரச்சினை எழுப்பப்பட்டு இருக்கிறது.

    பொய்களுக்கு கால்கள் கிடையாது, ஆனால் நஞ்சை கொண்டிருக்கின்றன. இந்த புகார்கள் எனக்கு ஆழ்ந்த துயரை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே நான் ஏற்கனவே கூறியது போல இது தொடர்பாக சரியான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜே.அக்பர் கூறியிருந்தார். 
    Next Story
    ×