search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திரா - ஒடிசா எல்லையில் இன்று பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்
    X

    ஆந்திரா - ஒடிசா எல்லையில் இன்று பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்

    ஒடிசா - ஆந்திரா எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று 35 வயது மதிக்கத்தக்க பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #WomenMaoist #MaoistKilled
    ஐதராபாத்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். 

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    அவ்வகையில், ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில எல்லையில் உள்ள பனசப்பட்டா-பெஜாங்கி காட்டுப்பகுதியில் சில மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து, சிறப்பு படையினருடன் ஆந்திர மாநில போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பலிமேலா காட்டுப்பகுதியில் இன்று தனிப்படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடி தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மீனா(35) என்ற பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆர்.பி. தாக்குர் தெரிவித்துள்ளார்.

    கொல்லப்பட்ட மீனா, மாவோயிஸ்ட் தலைவர் உதயா என்பவரின் மனைவி என்றும் மீனாவுடன் இருந்த மேலும் 3 பெண் மாவோயிஸ்டுகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மற்றும் தற்போதைய சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவி  வகித்த கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் அங்கு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #WomenMaoist  #MaoistKilled
    Next Story
    ×