search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறது - ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு
    X

    இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறது - ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சு

    ரஷியாவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்காக, அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், இந்தியா சுயேச்சையான கொள்கையை பின்பற்றி வருவதாக ராணுவ தளபதி கூறினார். #BipinRawat #IndianArmyChief
    புதுடெல்லி:

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, ரஷியாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளது. அதையும் மீறி, இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத், தனது 6 நாட்கள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார். நேற்று டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ரஷிய பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.



    ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியதாவது:-

    இந்திய ராணுவத்துடன் நல்லுறவு வைத்துக்கொள்ள ரஷியா விரும்புகிறது. ஏனென்றால், நமது ராணுவம் வலிமையானது, நமக்கு எது சரியானது என்பதை அறிந்து, அதற்காக உறுதியாக நிற்போம் என்பதை ரஷியா உணர்ந்துள்ளது.

    இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவது பற்றி ரஷிய கடற்படை அதிகாரி ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், “எங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படக்கூடும் என்பதை அறிவோம். இருப்பினும், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம்” என்று கூறினேன்.

    அமெரிக்காவிடம் இருந்து சில தொழில்நுட்பங்களை பெறுவதற்காக அந்நாட்டுடன் நாங்கள் தொடர்பு வைத்திருந்தாலும், அதுகுறித்து ரஷியா கவலைப்பட வேண்டாம், நாங்கள் சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறோம் என்றும் அவர்களிடம் கூறினேன். எங்கள் நாட்டுக்கு எது நல்லதோ, அதை செய்வோம் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

    ரஷியாவிடம் இருந்து காமோவ் ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இதர ஆயுத தளவாடங்களை வாங்குவதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பங்களையும் பெற விரும்புகிறோம்.

    இவ்வாறு ராணுவ தளபதி பேசினார்.

    இதற்கிடையே, இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தளபதி நம்பியார், மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமானம் மிகவும் திறன் வாய்ந்தது. நான் 2 வாரங்களுக்கு முன்பு, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது, அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த விமானம், விமானப்படைக்கு திருப்புமுனையாக அமையும். இந்த பகுதிக்கு ரபேல் விமானம் வந்தால், அது நல்ல பாதுகாப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×