search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை
    X

    ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை

    ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் குதிரைபேரத்தில் ஈடுபட்ட ஆதாரத்தை வெளியிடுவேன் என எடியூரப்பாவுக்கு குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    ஹாசன் :

    கர்நாடகத்தில் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா கடும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கூட்டணி ஆட்சியில், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் கூட்டணி ஆட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மும்பை அல்லது சென்னைக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சியை காப்பாற்ற வேண்டி முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அவர் சிக்க மகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு சென்று அங்கு சாரதா பீடத்தில் சிறப்பு யாகம் நடத்தினார். இதில் குமாரசாமியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அவர் ஹாசன் மாவட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் ஹாசன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த 35 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் தற்போது 37 எம்.எல்.ஏ.க்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முக்கியமான இந்த ஆலோசனை கூட்டத்தில் கே.ஆர். பேட்டை சட்டமன்ற உறுப்பினர் நாராயணகவுடா, துமகூரு புறநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கவுரிசங்கர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் காரணமாக இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-

    ஜனதா தளம்(எஸ்) எம்.எல். ஏ.க்கள் மிகவும் மனவலிமையோடு இருக்க வேண்டும். மீண்டும் நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சி இன்னும் நீண்ட நாட்கள் கர்நாடகத்தில் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு தற்போது காங்கிரஸ் தயவும் தேவைப்படுகிறது. அதனால் நாம் காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    நாம் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அதற்காக நாம் காங்கிரசையும் நம்முடன் இணைத்து செயல்பட வைக்க வேண்டும். இது தேவேகவுடாவின் குடும்ப ஆட்சி இல்லை. ஒட்டுமொத்த ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் ஆட்சி.

    இவ்வாறு அவர் பேசினார்.



    இதையடுத்து முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    என்னுடன் சில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில்தான் உள்ளனர். ஆபரேஷன் தாமரை மூலம் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலர் மும்பைக்கு செல்ல இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாங்கள் நடத்திய இந்த கூட்டத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களைத் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டணி மீது ஏற்பட்ட அதிருப்தியில் சில எம்.எல்.ஏ.க்கள் மும்பைக்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் கட்சியைவிட்டு விலகும் திட்டத்தில் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றன.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தை எடியூரப்பா கைவிட வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிரான ஆதாரங்களை நான் வெளியிடுவேன். எங்கள் கட்சியைச் சேர்ந்த சுரேஷ் கவுடா எம்.எல்.ஏ.விடம் எடியூரப்பாவும், பா.ஜனதாவினரும் செல்போனில் பேசி குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை அவர் கைவிடவில்லை என்றால் அவர் குதிரை பேரத்தில் ஈடுபட்ட ஆடியோவை பகிரங்கப்படுத்துவேன்.

    தற்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். யாரும் பா.ஜனதாவிடம் செல்லவில்லை. கட்சியைவிட்டு விலகவும் இல்லை. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி பாதுகாப்பாக உள்ளது. எடியூரப்பாவுக்கு எதிரான ஆதாரங்களை நான் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து நேற்று முன் தினம் இரவு முதல்-மந்திரி குமாரசாமி ஹாசனிலேயே தங்கினார்.

    நேற்று காலையில் அவர் ஹாசனில் நடந்த வளர்ச்சித்திட்ட பணிகளில் கலந்து கொண்டார். முதலில் அவர் ஹாசனில் ரூ.556.20 கோடி செலவில் ஹாசன் பால் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு எந்திரங்களையும், கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தயாரிப்பு பிரிவையும் தொடங்கி வைத்தார்.

    அதுமட்டுமல்லாமல் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.16.53 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள், ஆதர்ஷா பள்ளியில் ஆங்கில வழி கல்வி மற்றும் ரூ.63.10 கோடி செலவில் புதிய கட்டிடங்கள், ஹாசன் மாவட்டத்தில் சாலை சீரமைப்புக்கான பணிகள், ஆயுர்வேத-ஓமியோபதி மருத்துவமனைக்கென புதிய கட்டிடம், 43.50 கோடி செலவில் நீர்ப்பாசன திட்டம், 122.20 கோடி செலவில் ஸ்ரீராமதேவரே அணையை புனரமைக்கும் பணி, ரூ.333 கோடி செலவில் ஹேமாவதி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். சில திட்டங்களை அவர் காணொலி காட்சி மூலமாகவும் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது. கூட்டணி அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. மாநில அரசு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். நான் முதல்-மந்திரியாக 5 ஆண்டுகளையும் நிறைவு செய்வேன். இதில் மாற்று கருத்து இல்லை. இதுபற்றி யார் எதை சொன்னாலும் அதை மக்கள் நம்ப வேண்டாம். இதில் யாருக்கும் சந்தேகமும் வேண்டாம்.

    கூட்டணி ஆட்சிக்கு பா.ஜனதாவினர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதா வினரின் கனவு பலிக்காது.

    இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

    இந்த விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மந்திரிகள் எச்.டி.ரேவண்ணா, ஜி.டி.தேவேகவுடா டி.சி. தம்மண்ணா, சா.ரா.மகேஷ், பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர். பா.ஜனதாவை சேர்ந்த பிரீத்தம் ஜே.கவுடா எம்.எல்.ஏ. மட்டும் விழாவை புறக்கணித்தார். #Kumaraswamy #Yeddyurappa

    Next Story
    ×