search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு - அறிக்கை தாக்கல் செய்ய சிஏஜியிடம் காங். கோரிக்கை
    X

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு - அறிக்கை தாக்கல் செய்ய சிஏஜியிடம் காங். கோரிக்கை

    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கணக்காய்வு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிஏஜியை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #RafaleDeal #CAG #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜ.க அதனை மறுத்து வருகிறது.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இருகட்சிகள் இடையே வாக்குவாதம் நீடித்து வருகிறது. 

    இந்நிலையில், மத்திய கணக்கு தணிக்கை தலைவரை இன்று சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்  ஆனந்த் சர்மா, ரன்தீப் சுர்ஜேவாலா, கமல்நாத், கபில் சிபல் உள்ளிட்டோர் இவ்விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். 

    விமான கொள்முதல் விவகாரத்தில் நேரிட்டுள்ள முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள அவர்கள், இதுதொடர்பாக முழு விசாரணையை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டனர்.

    “ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிஏஜியிடம் தாக்கல் செய்துவிட்டோம். ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டு, தனியார் நிறுவனம் எவ்வாறு சேர்க்கப்பட்டது குறித்து விளக்கியுள்ளோம். விரைவில் சிஏஜி அறிக்கை அளிப்பார்கள் என நம்புகிறோம்” என ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். 
    Next Story
    ×