search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    62 வயது ஓமன் தாத்தாவிடம் தலாக் பெற்ற ஐதராபாத் இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?
    X

    62 வயது ஓமன் தாத்தாவிடம் தலாக் பெற்ற ஐதராபாத் இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?

    ஐதராபாத் நகரை சேர்ந்த 28 வயது பெண்ணை திருமணம் செய்து, ஓமன் நாட்டுக்கு அழைத்து சென்று குழந்தை பெற்ற பின்னர் தலாக் அளித்த 62 வயது நபர் மீது சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுப்பாரா? #HumaSaira #Omanhusbandtalaq
    ஐதராபாத்:

    அரபு நாடுகளுக்கு வேலை செய்ய செல்லும் சிலர் அங்குள்ள பெரும் பணக்காரர்களுக்கு புரோக்கர்களாக மாறி விடுகின்றனர்.

    உத்தரப்பிரதேசம், கேரளா, ஐதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள ஏழை வீட்டு முஸ்லிம் இளம்பெண்களுக்கு வலை விரிக்கும் இந்த புரோக்கர்கள் அந்த பெண்களின் பெற்றோர், உறவினர்களுக்கு பணத்தை அள்ளிவீசி, பால்மனம் மாறாத சிறுமிகளை சந்தைப்பொருள் ஆக்கி விடுகின்றனர்.

    60, 70 வயதான அரபு நாட்டவர்களுக்கு இப்படி இளம்பெண்களை திருமணம் செய்து வைக்கவும் சில மதகுருமார்கள் தயாராக உள்ளனர்.

    அவ்வகையில், ஓமன் நாட்டை சேர்ந்த 62 வயதுக்காரர் ஐதராபாத் நகரை சேர்ந்த ஹூமா சாய்ரா என்ற 28 வயது பெண்ணை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டு, தனது நாட்டுக்கு அழைத்து சென்றார்.

    திருமணம் ஆன 8 மாதங்களில் குறைப்பிரசவமாக ஒரு குழந்தையை ஹூமா பெற்றெடுத்தார். தொடர்ந்து நோய்வாய்ப்பட்ட அந்த குழந்தை மூன்று மாதங்களில் இறந்துப் போனது. சுமார் ஓராண்டு மட்டும் கணவருடன் ஓமனில் வாழ்ந்த ஹூமாவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

    அவர் மீது அதிக அக்கறை உள்ளதுபோல் நடித்த கணவர், ‘நீ ஐதராபாத்தில் உள்ள உன் தாய் வீட்டுக்கு சென்று உடம்பை பார்த்துகொள். குணமடைந்த பின்னர் உன்னை நான் அழைத்து வருகிறேன்’ என்று கூறி கடந்த 30-7-2018 அன்று இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.



    மீண்டும் ஓமனுக்கு செல்லும் நாளை ஹூமா எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த 12-8-2018 அன்று ஓமனில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரே மூச்சில் ‘முத்தலாக்’ என்று மெஸேஜ் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் ஹூமா அவரை கைபேசியில் தொடர்புகொண்ட போது பதில் அளிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹூமா, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எனக்கு உதவி செய்ய வேண்டும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    இந்தியாவில் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்ற உருவாக்கப்பட்ட சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியும், மாநிலங்களவையில் நிறைவேற முடியாமல் முடங்கி கிடக்கின்றது.

    இதற்கிடையில், முத்தலாக் முறையை ஒழிக்கும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் முத்தலாக் முறை தொடர்வதால், இதுதொடர்பாக அவசர சட்டம் இயற்ற மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறினாலும், இன்று இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து நடைமுறைக்கு வந்தாலும், ஓமன் நாட்டில் இருக்கும் ஹூமாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கும், இந்திய குற்றவியல் சட்டத்துக்கும் உண்டா?

    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இந்த விவகாரத்தில் தலையிட்டு எடுக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹூமாவுக்கு கிடைக்கப்போகும் நிவாரணமும், நீதியும் என்ன? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். #HumaSaira  #Omanhusbandtalaq
    Next Story
    ×