search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா ஆணவ கொலை வழக்கு - ஒருவர் கைது
    X

    தெலுங்கானா ஆணவ கொலை வழக்கு - ஒருவர் கைது

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் கண் முன்னே தந்தை அனுப்பிய கூலிப்படையால் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #Telangana #HonourKilling
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதா மாற்று ஜாதி இளைஞரான பிரணாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மாருதிராவ், கூலிப்படையை ஏவி, மகளின் கணவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

    இதற்காக கூலிப்படைக்கு 1 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூலிப்படையைச் சேர்ந்த சர்மா என்பவரை வைத்து இந்த கொலை அரங்கேற்றப்பட்டது.

    பொது இடத்தில் தன் மனைவியின் கண் முன்னேயே பிரணாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவானது. வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.

    இதனை அடுத்து, குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கொலையாளி சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். பீகாரில் பதுங்கி இருந்த கொலையாளியை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சர்மாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலைக்கு பின்னால் இருக்கும் அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #HonourKilling #Telangana
    Next Story
    ×