search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகளை படத்தில் காணலாம்.
    X
    தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னியாஸ்திரிகளை படத்தில் காணலாம்.

    பணம், அதிகாரத்தால் பி‌ஷப் தப்ப முயற்சி- போப் அலுவலகத்துக்கு கன்னியாஸ்திரி கடிதம்

    ஜலந்தர் பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமான வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். #Jalandharbishop
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் செயல்படும் சீரோ மலபார் சபையின் கீழ் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஒரு சபை செயல்பட்டு வருகிறது. இதன் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ முல்லக்கல்.

    பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் குருவிலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். கோட்டயத்திற்கு அந்த பி‌ஷப் வந்தபோது தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர், போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரள தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று பி‌ஷப்பிடம் இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி உள்ளனர்.

    இதனால் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பி‌ஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமான வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு இது தொடர்பாக புகார் கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.

    எனது சிறு வயது முதல் சபையை தாய்க்கு சமமாக பாவிக்கவே கற்பிக்கப்பட்டேன். ஆனால் அனுபவ ரீதியாக இங்கு பெண்கள் சிற்றன்னை தனமாகதான் நடத்தப்படுகின்றனர். என்னை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அதுபற்றி நடவடிக்கை எடுக்கும்படி நான், ஏற்கனவே உங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்.

    ஆனால் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போலீசில் புகார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தனக்கு தேவைப்படும் கன்னியாஸ்திரிகளை நிர்பந்தப்படுத்தியோ அவர்களது பலவீனத்தை பயன்படுத்தியோ பி‌ஷப், தனது ஆசைக்கு இணங்க வைப்பது வழக்கம். அவர் ஏராளமான கன்னியாஸ்திரிகளிடம் தவறாக நடந்துள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் பி‌ஷப்பின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாக 20-க்கும் அதிகமான கன்னியாஸ்திரிகள் சபையில் இருந்து வெளியேறி உள்ளனர். பி‌ஷப்பால் பலமுறை நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோதும், அதை உடனே வெளியே சொல்லாததற்கு மிகுந்த பயமும், அவமானமும் தான் காரணம். எனது குடும்பத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் இருந்தது.

    நான் இழந்ததை வாடிகனால் திருப்பித்தர முடியுமா? பி‌ஷப்பால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு உடனே சபையில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். ஆனால் சபை மூத்தவர்கள் நிர்ப்பந்தம் காரணமாக நான் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

    பி‌ஷப் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெறும்படி பலரும் என்னை மிரட்டுகிறார்கள். பணம், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து பி‌ஷப் தப்ப முயற்சி செய்கிறார். சபையில் பெண்களுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் நீதியை உறுதிப்படுத்தும் சட்டம் ஏதாவது உண்டா? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்து பாதிப்பு குறித்து வெளியே சொல்லாமல் பயந்து வாழும் கன்னியாஸ்திரிகள் பலர் உள்ளனர். இவைகளை சபை கண்டு கொள்ளாமல் இருந்து அதன் மீதான மக்களின் நம்பிக்கை அழிந்து விடும்.

    எனவே பிராங்கோவை பி‌ஷப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதற்கிடையில் தன் மீது கூறப்பட்டுள்ள புகாரை பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த புகார் ஆதாரமற்றவை என்றும், அது தொடர்பான விசாரணையை சந்திக்க தான் தயாராக உள்ளேன். என் மீது களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. என்னை நிர்ப்பந்தப்படுத்தவும் முயற்சி செய்கிறார்கள். அந்த கன்னியாஸ்திரி என்னிடம் பல தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார். அது நடக்காததால் தற்போது எனது மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பொய் புகார் கூறி உள்ளார்.

    குற்றம் நடந்ததா? என்பது புகார் தெரிவித்தவர், நான், கடவுள் ஆகிய 3 பேருக்குதான் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியின் சகோதரரும் பி‌ஷப் மீது பல குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அவர் கூறும்போது, பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் தான் குற்றமற்றவர் என்று கூறுவது பொய். அவர் செய்த தவறை வெளியே கூறாமல் இருக்க ரூ.5 கோடி பணம் மற்றும் 10 ஏக்கர் நிலம் தருவதாக பேரம் பேசினார்கள். இதையும் நாங்கள் போலீசில் தெரிவித்துள்ளோம் என்றார்.

    இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கி உள்ள பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த போராட்டத்தில் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த 4 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று 4-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் பி‌ஷப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி உள்ளனர். அதில் பி‌ஷப்பை உடனே கைது செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.

    இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, பி‌ஷப்பை கைது செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். #Jalandharbishop

    Next Story
    ×