search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசத்துக்கு கூடுதல் மின்சாரம், புதிய ரெயில் பாதை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X

    வங்காளதேசத்துக்கு கூடுதல் மின்சாரம், புதிய ரெயில் பாதை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    வங்காளதேசத்துக்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் மற்றும் திரிபுராவை இணைக்கும் புதிய ரெயில் பாதை திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். #PMModi #Sheikhasina
    டாக்கா:

    அண்டைநாடான வங்காளதேசத்துக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. அவ்வகையில், இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு கூடுதலாக 500 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 

    வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா இந்த தொடக்க விழாவில் காணொலி வழியாக பங்கேற்றார். 

    இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, திரிபுரா மாநில முதல்- மந்திரி பிப்லாப் தேப் ஆகியோரும் காணொலி மூலம் பங்கேற்றனர்.

    மேலும், வங்காளதேசத்தின் அக்குஹாரா பகுதியை திரிபுரா மாநிலத்தின் அகர்தாலா நகருடன் இணைக்கும் இரட்டை வழித்தட ரெயில் பாதை அமைக்கும் பணிக்கும் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

    இந்த திட்டங்களின் மூலம் வங்காளதேசமும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக வந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    வரும் 2021-ம் ஆண்டுக்குள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும், 2041-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாகவும் உருவாக இலக்கு நிர்ணயித்துள்ள வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கு இந்தியா என்றென்றும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் உத்திரவாதம் அளித்தார்.

    இந்தியா செய்துவரும் உதவிகளுக்காக பிரதமர் மோடி, மேற்கு வங்காளம் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி, திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப் ஆகியோருக்கு ஷேக் ஹசினா நன்றி தெரிவித்தார். #IndiaBangladeshrailproject #PMModi #Sheikhasina
    Next Story
    ×