search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 பேரை விடுதலை செய்யும் தமிழக கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் - சுப்பிரமணிய சாமி
    X

    7 பேரை விடுதலை செய்யும் தமிழக கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் - சுப்பிரமணிய சாமி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #RajivGandhiassassinationcase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது. 

    இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
     
    இதையடுத்து, சென்னை கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

    சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


    இந்த பரிந்துரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் உடனடியாக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு தமிழக அரசுக்கு சாதகமாக அமைய வேண்டும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக இன்றிரவு கருத்து தெரிவித்த பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி, ‘இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு கவர்னரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார்  என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  #7convictsrelease #subramanianSwamy #TNgovernor  #RajivGandhiassassinationcase
    Next Story
    ×