search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக பரூக் அப்துல்லா மிரட்டல்
    X

    ஜம்மு - காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக பரூக் அப்துல்லா மிரட்டல்

    ஆர்ட்டிகிள் 35 ஏ சட்ட பிரிவை பாதுகாக்க வில்லை என்றால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என தேசிய மாநாடு கட்சித்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். #Article35A #FarooqAbdullah
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. 

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் 5-ம் தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் பிரிவு 35 ஏ குறித்தான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டால் சட்டம் - ஒழுங்கி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மாநில கவர்னர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியதால், வழக்கு விசாரணை அடுத்தாண்டு ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது, “ஆர்டிக்கிள் 35 ஏ சட்ட பிரிவை நீதிமன்றத்தில் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்” என குறிப்பிட்டார்.

    ஏற்கனவே, காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத இயக்கங்கள் உள்ளாட்சி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×