search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் ஆம்புலன்சுக்காக தனது பயணத்தை தள்ளிவைத்த ராகுல் காந்தி
    X

    ஏர் ஆம்புலன்சுக்காக தனது பயணத்தை தள்ளிவைத்த ராகுல் காந்தி

    கேரளாவில் வெள்ள பாதிப்பு பணிகளை பார்வையிட சென்ற ராகுல் காந்தி, ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து காத்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி சூனியமாக காட்சியளித்தன. மழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை அங்கு 370-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இதற்கிடையே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் நேற்று செங்கனூர் சென்றார். அங்குள்ள முகாமுக்கு நேரில் சென்ற அவர் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா செல்வதற்கு தயாராக இருந்தார். அப்போது அங்கு ஏர் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதில் நிவாரணமுகாமில் தங்கியிருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

    இதை கவனித்த ராகுல் காந்தி, தனது ஹெலிகாப்டரை நிறுத்துமாறு கூறினார். முதலில் ஏர் ஆம்புலன்சுக்கு பறக்க அனுமதி கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து, அந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஆலப்புழாவுக்கு சென்றது. சுமார் அரை மணி நேரம் கழித்து ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் ஆலப்புழாவுக்கு சென்றது.

    ஏர் ஆம்புலன்சுக்கு முன்னுரிமை கொடுத்து தனது ஹெலிகாப்டரை காத்திருக்க செய்த ராகுல் காந்தியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #RahulGandhi #AirAmbulance
    Next Story
    ×